கடந்த வாரம் 3 முறை அத்துமீறி இந்தியாவுக்குள் நுழைந்த சீன ராணுவம்
டேராடூன்: உத்தரகண்டின் சமோலி பகுதியில் கடந்த வாரம் மூன்று நாட்கள் சீன ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்துள்ளனர்.
டோக்லாம் விவகாரத்தால் இந்தியா-சீனா இடையே பதட்டம் நிலவி வருகிறது. இந்நிலையில் 15 சீன ராணுவ வீரர்கள் கடந்த 24, 25, மற்றும் 26 ஆகிய மூன்று தேதிகளில் அத்துமீறி இந்தியாவுக்குள் வந்துள்ளனர்.
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சமோலி பகுதியில் சீன ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்தது தெரிய வந்துள்ளது. பிரிக்ஸ் மாநாட்டிற்காக இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பெய்ஜிங் சென்றிருந்த நேரத்தில் தான் சீன ராணுவம் அத்துமீறல் செய்துள்ளது.
சீன ராணுவத்தினர் 800 மீட்டர் அளவுக்கு சமோலி பகுதிக்குள் வந்துள்ளனர். மேலும் இந்திய-திபெத்திய எல்லை பாதுகாப்பு படையினருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளனர். இந்த வாக்குவாதம் சுமார் இரண்டு மணிநேரம் நடந்துள்ளது.
கடந்த 1958ம் ஆண்டு இதே பகுதியில் இதே பிரச்சனை நடந்துள்ளது. அந்த ஆண்டு சீன அதிகாரிகள் இந்தியா வந்தபோது அத்துமீறல் நடந்தது. இரு நாடுகளும் இந்த பகுதிக்கு படைகளை அனுப்பாது என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த பிரச்சனைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை.
கடந்த 2007ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை குறைந்தது 37 முறை சீன ராணுவம் சமோலி பகுதிக்குள் அத்துமீறி நுழைந்துள்ளது.