அப்போ உடம்பு சரியில்ல-னு சொன்னது சும்மாவா? - நிதிஷ் மிரட்டலுக்கு பணிந்த பாஜக
பீகார்: என்டிஏ ஆலோசனைக் கூட்டத்தில், எல்ஜேபி கட்சித் தலைவர் சிராக் பாஸ்வான் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கலந்து கொள்ளவில்லை என்று கூறியிருந்தார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற என்டிஏ கூட்டத்தில் கலந்து கொள்ள, லோக் ஜனசக்தி (எல்ஜேபி) கட்சித் தலைவர் சிராக் பாஸ்வானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் அந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், சிராக் பாஸ்வான் கூட்டத்தில் கலந்து கொண்டால், ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இருந்து விலக நேரிடும் என முதல்வர் நிதிஷ் குமார் எச்சரிக்கை விடுத்ததாக தெரிகிறது.
இதைத் தொடர்ந்து, கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்று பாஜக சார்பில் சிராக் பாஸ்வானிடம் கேட்டுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, பாராளுமன்ற விவகார அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி, "பாராளுமன்றத்தின் அடுத்த பட்ஜெட் கூட்டத்தொடருக்கான முக்கியமான பிரச்சனைகள் மற்றும் வணிகம்" குறித்து விவாதிக்க என்.டி.ஏ கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு சிராக் பாஸ்வானுக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
சனிக்கிழமையன்று, தி சண்டே எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய சிராக், "எனது உடல்நிலை காரணமாக கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. நான் உடல்நிலை சரியில்லாமல் இருந்தேன், அதனால் நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பீகார் முதல்வர் நிதிஷ் குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த மாநில சட்டப்பேரவை தேர்தலின் போது பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இருந்து எல்ஜேபி விலகியது.
எனினும், அந்தக் கூட்டணியில் இருந்து மாநில அளவில் மட்டுமே வெளியேறியதாகவும், தேசிய அளவில் அந்த கூட்டணியில் தொடர்வதாக சிராக் பாஸ்வான் அறிவித்திருந்தார்.
ஆனால், தேசிய அளவிலான கூட்டணியில் இருந்தும் எல்ஜேபியை வெளியேற்ற வேண்டும் என்று நிதிஷ்குமார் பாஜகவிடம் வலியுறுத்தியதாக செய்தி வெளியானது.
இந்த சூழலில் தான் சிராக் பாஸ்வானுக்கு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க பாஜக அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், நிதிஷின் எச்சரிக்கையை அடுத்து பாஜக இந்த விவகாரத்தில் பின்வாங்கிவிட்டதாகவே அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.