அப்பா இறந்த மறுநாளே.. போட்டோவுக்கு முன்பு போஸ் கொடுத்து "வீடியோ ஷூட்".. சர்ச்சையில் சிராக்!
சிராக் பாஸ்வானின் வீடியோ ஷூட் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது
பீகார்: அப்பா இறந்து ஒருநாள் தான் ஆகிறது.. ஆனால் வீடியோ ஷூட் ஒன்றுக்காக அப்பாவின் படத்துக்கு முன்னாடி மகன் சிராக் பஸ்வான் நின்று ரிகர்சல் பார்த்துள்ள சம்பவம் கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கி வருகிறது.
மத்திய உணவுத்துறை அமைச்சரும், மூத்த தலைவருமான ராம்விலாஸ் பஸ்வான் உடம்பு சரியில்லாமல் கடந்த 8ம் தேதி இறந்துவிட்டார்.
இதையடுத்து, ராம்விலாஸ் பாஸ்வானுக்கு துக்கம் அனுசரிப்பதற்காக அவரது மகன் சிராக் பஸ்வான் ரிகர்சல் பார்க்கும் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.. அப்பா இறந்த மறுநாளே இந்த வீடியோவுக்காக ஒத்திகை பார்த்துள்ளார் சிராக் .
தொழில்துறையில் மிகப் பெரிய அளவில் பின்தங்கியிருக்கும் பீகார்! தலைவிரித்தாடும் வேலைவாய்ப்பின்மை!
ரிகர்சல்
ஒத்திகை மட்டுமல்ல, சிராக் பாஸ்வான் அந்த வீடியோவில் ஜோக் அடித்து கொண்டிருக்கிறார்.. எந்த இடத்தில் அந்த வீடியோவை கட் செய்ய வேண்டும், எங்கே எடிட் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்.. மேலும் தன்னுடைய ஹேர் ஸ்டைல் எப்படி இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கிறார்.. "சிங்கிள் கேமராவா, டபுள் கேமராவா" என்றும் அங்கிருந்தோரிடம் கேட்கிறார்.. அப்பா இறந்த மறுநாளே யாராவது இப்படி எல்லாம் செய்வார்களா? இதை பார்த்தால், பாலிவுட் பட ஷூட்டிங் போலவே இருப்பதாக சர்ச்சை கிளம்பி உள்ளது.
ஹேர்ஸ்டைல்
இந்த வீடியோ மொத்தம் 2 நிமிடம் ஓடுகிறது.. அப்பாவை போலவே ஹேர்ஸ்டைலுடன் இருக்கிறார்.. அதாவது தலைமுடியை மழித்து கொண்டு, அப்பாவுக்காக துக்கம் அனுசரிப்பதுபோல அதில் செய்துள்ளார்... அவருக்கு முன்பு ராம்விலாஸ் பஸ்வான் போட்டோவைக்கப்பட்டுள்ளது.. அதன் முன்புதான் வெள்ளை கலர் டிரஸ்ஸில் அனுஷ்டிப்பது போல் அவர் போஸ் கொடுத்துள்ளார்.
துக்கம்
ஆனால், இந்த சர்ச்சை குறித்து சிராக் பஸ்வான் சொல்லும்போது, எனக்கு கெட்ட பெயரை உருவாக்குவதற்காகவே நிதிஷ்குமார் செய்த காரியம் இது, என்னை கவிழ்க்க இந்த அளவுக்கு அவர் கீழே இறங்குவார் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.. என் அப்பா இறந்த துக்கம் எனக்கு எவ்ளோ இருக்குன்னு நிதிஷ் குமாருக்கு நிரூபிக்கணுமா என்ன?"என்று பதிலுக்கு குற்றஞ்சாட்டி உள்ளார்.
நீரஜ்குமார்
இந்த விவகாரத்திற்கு மாநில தகவல் ஒலிபரப்பு அமைச்சர் நீரஜ்குமார் கிண்டலுடன் கருத்து சொல்லி உள்ளார்.. அதில், "பெரியவங்க இறந்துவிட்டால் துக்கம் அனுஷ்டிப்பதுதான் நம்ம பழக்கம்.. ஆனால், இந்த புதிய தலைமுறை நடிகர்களை பாருங்களேன், அப்பா இறந்தவுடன் ஷூட்டிங்கில் பிஸியாகி விடுகிறார்கள்.. பரம்பரை அரசியல், குடும்ப அரசியலின் வெட்கங்கெட்ட தனம்.. இறந்து போன அப்பாவை வாக்கு சேகரிக்க பயன்படுத்துகிறார்" என்று விமர்சித்துள்ளார்.
பதிலடி
இதற்கும் சிராக் பதிலடி தந்ததுள்ளார்.. "என் அப்பா இறந்து 6 மணிக்குள் வேட்பாளர்களின் முதல் பட்டியலை நான் வெளியிட வேண்டும்... கட்சித் தலைவராக என் கடமையை செய்ய வேண்டாமா? 10 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே வரக்கூடாத நிலையில் வீடியோ எடுப்பதை தவிர வேறென்ன செய்யறது?" என்று கேட்டார். தேர்தல் நெருங்கும் சமயத்தில், இந்த வீடியோ ஷூட் எடுத்ததும், அது குறித்து சிராக் பதிலடி தருவதும், எதிர்க்கட்சிகள் அதை விமர்சிப்பதும் என பீகார் மாநில அரசியலே பரபரத்து காணப்படுகிறது.