வெள்ளநிவாரணப் பகுதிகளைப் பார்வையிடச் சென்ற சிரஞ்சீவி தவறி நீரில் விழுந்ததால் பரபரப்பு
ஹைதராபாத்: வெள்ளச் சேதாரப் பகுதிகளை பார்வையிடச் சென்ற போது நடிகரும், மத்திய அமைச்சருமான சிரஞ்சீவீ வெள்ள நீரில் தவறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரது பாதுகாப்பு வீரர்கள் நீரில் குதித்து அவரை பாதுகாப்பாக மீட்டனர்.
பாய்லின் புயலைத் தொடர்ந்து ஆந்திராவில் கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது. இதுவரை வெள்ளத்தினால் 53 பேர் பலியாகியுள்ளனர். கிட்டத்தட்ட 16 மாவட்டங்களில் உள்ள பல லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
நேரில் பார்வை....
இந்நிலையில், நடிகரும் மத்திய அமைச்சருமான சிரஞ்சீவி வெள்ள நிவாரண பணிகளை நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக நேற்று கிழக்கு கோதாவரி மாவட்டத்துக்கு சென்றிருந்தார்.
கால் நழுவியது....
காக்கிநாடா அருகேயுள்ள ஆஞ்சநேயா நகரை பார்வையிடுவதற்காக படகில் ஏறப்போன சிரஞ்சீவி கால் நழுவி எதிர்பாராவிதமாக வெள்ள நீரில் விழுந்தார்.
கரையேற்றினர்...
இதனால் பதற்றமடைந்த அவரது பாதுகாவலர்கள் உடனடியாக நீரில் குதித்து அவரை பாதுகாப்பாக கரையில் சேர்த்தார்கள்.
சிறிது ஓய்வு....
அதனைத் தொடர்ந்து, அங்கிருந்து நேராக அனபர்தி தொகுதி எம்.எல்.ஏ. சேஷா ரெட்டியின் வீட்டிற்கு சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்த சிரஞ்சீவி, பின்னர் விசாகப்பட்டினத்திற்கு புறப்பட்டு சென்றார்.