"காப்பு" சமூகத் தலைவரைப் பார்க்கச் சென்ற நடிகர் சிரஞ்சீவிக்கு ‘காப்பு’... ராஜமுந்திரி ஏர்போர்ட்டில்!
ஹைதராபாத்: காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வரும் காப்பு சமூகத் தலைவர் பத்மநாபனைச் சந்திக்கச் சென்ற நடிகர் சிரஞ்சீவியை, ராஜமுந்திரி விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆந்திராவில் தங்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க கோரி காப்பு சமூகத் தலைவர் பத்மநாபம் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருகிறார். கிழக்கு கோதாவரி மாவட்டம் துனி அருகே உள்ள கிரிலம்புடியில் உள்ள தனது வீட்டில் கடந்த வெள்ளியன்று இந்த உண்ணாவிரதத்தை அவர் தொடங்கினார்.
பத்மநாபமுக்கு ஆதரவாக பல்வேறு இடங்களிலும் காப்பு சமூக மக்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இட ஒதுக்கீடு கேட்டு ஏற்கனவே 2 பேர் உயிரிழந்த நிலையில், சில இடங்களில் இளைஞர்கள் செல்போன் டவர்களில் ஏறி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
4வது நாள்...
உண்ணாவிரதம் தற்போது 4வது நாளை எட்டியுள்ள நிலையில், பத்மநாபமின் மனைவி சோர்வடைந்து படுக்கையில் உள்ளார். ஆனபோதும், மருத்துவ பரிசோதனைக்கு அவர்கள் இருவரும் மறுத்து வருகின்றனர். இதனால் கிரிலம்புடி கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
போலீசார் பாதுகாப்பு...
பாதுகாப்புக்காக பத்மநாபம் வீட்டை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மத்திய படை போலீசாரும் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர். பத்மநாபனைக் கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் அசம்பாவிதங்களைத் தடுக்க பத்மநாபம் யாரும் சந்திக்க விடாமல் போலீசார் தடுத்து வருகின்றனர்.
சிரஞ்சீவி...
இந்நிலையில், பத்மநாபமைச் சந்திப்பதற்காக முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய காங்கிரஸ் எம்.பியுமான நடிகர் சிரஞ்சீவி இன்று கிரிலம்புடிக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. சிரஞ்சீவியும் அதே காப்பு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்பார்ப்பு...
இதனால் பத்மநாபமைச் சந்தித்ததும் அவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேட்டியளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
கைது...
ஆனால், அசம்பாவிதங்களைத் தடுக்க நினைத்த போலீசார், ராஜமுந்திரி விமான நிலையத்தில் சிரஞ்சீவியையும், அவருடன் வந்த காங்கிரஸ் தலைவர்களையும், தொண்டர்களையும் கைது செய்தனர்.
கண்டனம்...
சிரஞ்சீவியும், காங்கிரஸ் தலைவர்களும் கைது செய்யப்பட்டதற்கு ஆந்திர மாநிலத்தை சேர்ந்த காங்கிரசார் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.