சித்தூர் நரபலி சம்பவம்.. மகள்களின் சடலம் முன் பாட்டு பாடி டான்ஸ் ஆடிய தாய்.. அதிர்ந்த போலீஸ்!
சித்தூர்: அமானுஷ்ய சக்தி கிடைக்கும் என மூடநம்பிக்கையால் இரு மகள்களை பெற்றோர் நரபலி கொடுத்த சம்பவத்தில் இரு சடலங்கள் முன்பு தாய் பாட்டு பாடி டான்ஸ் ஆடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி சிவநகரில் வசித்து வந்தவர்கள் புருஷோத்தம் நாயுடு- பத்மஜா தம்பதி. இதில் புருஷோத்தம் நாயுடு மகளிர் கல்லூரியின் துணை முதல்வராகவும் பத்மஜா தனியார் கல்லூரி நிறுவனத்தின் பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.
அவர்களின் மூத்த மகள் அலெக்கியா (27) மேனேஜ்மென்ட் ஆப் இந்தியன் பாரஸ்ட் சர்வீஸ் படித்து வந்தார். இளைய மகள் சாய் திவ்யா (22) ஏ.ஆர் ரஹ்மானின் இசை கல்லூரியில் பயின்று வந்தார்.
8 மாதங்கள்
இவர்கள் கொரோனா ஊரடங்கால் கடந்த 8 மாதங்களாக மதனப்பள்ளியில் உள்ள பெற்றோருடன் தங்கியிருந்தனர். கடந்த சில தினங்களாகவே புருஷோத்தமனும் பத்மஜாவும் அற்புதங்கள் நிகழ்த்துவதாக கூறி வீட்டில் பூஜைகள் செய்து வந்தனர். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் பூஜைகள் செய்துவிட்டு பெற்ற மகள்கள் இருவரையும் உடற்பயிற்சி செய்யும் கருவி மூலம் பயங்கரமாக தாக்கி கொன்றுள்ளார்கள்.
நிர்வாண பூஜை
இருவரையும் நிர்வாணப்படுத்தி உடல்களை பூஜை அறையில் வைத்துவிட்டு அவர்கள் இருவரும் மீண்டு எழுந்து வருவார்கள் என கூறி வந்துள்ளனர். இதனிடையே மகள்களின் அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாரையும் அவர்களின் உறவினர்களையும் வீட்டுக்குள் விடாமல் இருவரும் தடுத்து வந்தனர்.
மயக்கம்
சிறிது நேரம் கழித்து இருவரும் அரை மயக்கம் நிலையில் அப்படியே அமர்ந்திருந்தனர். பின்னர் புருஷோத்தமன் சகஜ நிலை திரும்பினார். ஆனால் பத்மஜாவோ ஏதோ வித்தியாசமாக நடந்து கொண்டார். மகள்களின் சடலங்கள் முன் பத்மஜா பாட்டு பாடியும் நடனம் ஆடியும் போலீஸாரை வியப்பில் ஆழ்த்தினார்.
கடவுளால் உருவான கொரோனா
பின்னர் சிறிது நேரத்தில், கொரோனா வைரஸ் சீனாவிலிருந்து உருவாகவில்லை. அது இந்த கலியுகத்தில் கெட்ட சக்திகளை அழிக்க கடவுளால் உருவாக்கப்பட்டது என கத்தினார். இந்த நிலையில் இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்களுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ள ஏற்பாடு செய்தனர்.
சிவனின் மறுஉருவம்
அப்போது புருஷோத்தமன் ஒத்துழைத்த நிலையில் பத்மஜாவோ எனக்கு கொரோனா டெஸ்ட் செய்யக் கூடாது, ஏனெனில் நானே மனித வடிவில் உள்ள கொரோனாதான். எனவே சோதனைகள் எல்லாம் தேவையில்லை. நான் சிவனின் மறுஉருவம் என்றும் பத்மஜா அலப்பறை செய்த போதிலும் அவருக்கு கொரோனா சோதனைக்கான சாம்பிள் எடுக்கப்பட்டுவிட்டது.