ஆந்திராவில் பயங்கரம்.... சித்தூர் மேயர் அனுராதா மற்றும் அவரது கணவர் மர்ம நபர்களால் சுட்டுப் படுகொலை!
சித்தூர்: ஆந்திராவின் சித்தூர் மாநகராட்சி மேயர் அனுராதா மர்ம நபர்களால் இன்று பிற்பகல் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். அவரது கணவரும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.
சித்தூர் மாநகராட்சி மேயராக தெலுங்கு தேசம் கட்சியின் அனுராதா பதவி வகித்து வந்தார். சித்தூரில் இன்று தமது அலுவலகத்தில் அவர் இருந்த போது மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கியுடன் நுழைந்துள்ளனர்.'
அவர்களை அனுராதாவின் கணவர் மோகன் தடுத்துள்ளார். அப்போது மோகனை அந்த கும்பல் கத்தியால் குத்தியது. பின்னர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் படுகாயமடைந்த மோகன் நிலைகுலைந்து போனார். இதையடுத்து அந்த மர்ம நபர்கள், அனுராதாவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதில் அனுராதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இரண்டு குண்டு காயங்களுடன் படுகாயமடைந்த கணவர் மோகன் ஆபத்தான நிலையில் தமிழகத்தின் வேலூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மோகன் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து அம்மாநில போலீசார் தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.