வெள்ள நீரில் மிதக்கும் விலங்குகளின் உடல்- காலரா பயத்தில் ஜம்மு மக்கள்!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் வெள்ளத்தில் இறந்த விலங்குகள் அழுகிய நிலையில் நீரில் மிதப்பதால் காலரா போன்ற நோய்கள் பரவும் வாய்ப்புள்ளதாக மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
வரலாறு காணாத வெள்ளப்பெருக்கால் திண்டாடி வரும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்னமும் வீடுகளை சுற்றியுள்ள வெள்ளம் வடிந்தபாடில்லை.
200 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில், வெள்ளத்தில் சிக்கி தவித்த 2,50,000 லட்சம் பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.
சுகாதார குறைபாடுகள்:
இந்நிலையில் வெள்ளம் பாதித்துள்ள ஸ்ரீ நகரில் சுகாதார குறைபாடுகளால் காலரா பரவும் வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
தொற்றுநோய் அபாயம்:
ஆயிரக்கணக்கான விலங்குகள் அழுகிய நிலையில் நீரில் மிதப்பதால் எந்நேரமும் மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
நிவாரண முகாம்களில் தஞ்சம்:
இதனாலேயே வெள்ளம் வடிந்தாலும் தங்கள் வீடுகளுக்கு திரும்பாமல் மக்கள் நிவாரண முகாம்களிலேயே தங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
நெருங்கும் அபாயம்:
தண்ணீரில் மிதக்கும் விலங்குகளை உடனடியாக அப்புறப்படுத்தாவிட்டால் எதிர் வரும் நாட்கள் மக்களுக்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
காலரா நோய் தாக்கலாம்:
இதன் காரணமாக மக்களை காலரா நோய் தாக்கக்கூடும் என ஷப்கத் கான் என்ற மருத்துவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கோரிக்கை:
எனவே அரசு துரித நடவடிக்கை எடுத்து வெள்ளத்தில் மிதக்கும் கால்நடைகளை அப்புறப்படுத்தவேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.