ஹெலிகாப்டர் பேர ஊழல்: மாஜி விமானப்படை தளபதி தியாகியிடம் 3-ம் நாளாக இன்றும் சி.பி.ஐ. விசாரணை
டெல்லி: ஹெலிகாப்டர் பேர ஊழல் தொடர்பாக முன்னாள் விமானப் படை தளபதி தியாகியிடம் 3-வது நாளாக சிபிஐ அதிகாரிகள் இன்றும் விசாரணை நடத்தினர்.
2010-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து விவிஐபிகளுக்கான 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில், ரூ.360 கோடி லஞ்சப் பணம் இந்தியர்களுக்கு இடைத் தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக 2013-ல் விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி. தியாகியிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. பின்னர், அவர் உள்ளிட்ட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்தது. இந்த நிலையில், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தம் 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் ரத்து செய்யப்பட்டது.
இத்தாலியில் வழக்கு...
இதனிடையே இந்தியர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்டது தொடர்பாக அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் மீது இத்தாலியில் உள்ள மிலன் நகர நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் அந்த நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு அண்மையில் சிறைத்தண்டனையும், அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
லஞ்சம் வாங்கிய இந்தியர்கள்
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இந்தியர்கள் லஞ்சம் பெற்றதையும் நீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. தனது விசாரணையை மீண்டும் தொடங்கி இருக்கிறது. இதற்காக, ஓய்வு பெற்ற விமானப்படை முன்னாள் துணைத் தளபதி ஜே.எஸ்.குஜ்ராலை ஆஜராகும்படி சி.பி.ஐ. உத்தரவிட்டு இருந்தது. இதனால், நேற்று முன்தினம் காலை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் அவர் ஆஜரானார். அப்போது ஜே.எஸ்.குஜ்ராலிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவரை வழக்கின் ஒரு சாட்சியாகவே விசாரித்தனர்.
தியாகி மீதான புகார்
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு 2005-ம் ஆண்டு நடந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டபோது அதில் அந்த நிறுவனத்துக்கு ஆதரவாக சில திருத்தங்கள் செய்யப்பட்டன. அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம் இந்திய ஒப்பந்தத்தை பெறும் வகையில், அவற்றின் ஹெலிகாப்டர்கள் பறக்கும் உயரத்துக்கு ஏற்ப, அதாவது 19 ஆயிரம் அடி உயரம் என்பதை 15 ஆயிரம் அடியாக குறைத்ததாக எஸ்.பி.தியாகி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து, அந்த கூட்டத்தில் பங்கேற்ற அப்போதைய விமானப்படைத் தளபதி எஸ்.பி.தியாகியை விசாரணைக்கு ஆஜராகும்படி சி.பி.ஐ. உத்தரவிட்டிருந்தது.
சிபிஐ விசாரணை
அதன்படி, நேற்று முன்தினம் காலை சுமார் பத்துமணியளவில் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் தியாகி ஆஜரானார். அவரிடம் பல்வேறு கேள்விகள் முன்வைத்து சி.பிஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் 3-வது நாளாக இன்றும் டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் தியாகி ஆஜரானார். அவரிடம் இன்றும் துருவித் துருவி சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.