ஹெலிகாப்டர் பேர ஊழல்.. எம்.கே.நாராயணனிடம் விசாரணை நடத்த அனுமதி கோரும் சிபிஐ
டெல்லி: அகஸ்டா வெஸ்ட்லேன்ட் ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தில் மேற்கு வங்க ஆளுநர் எம்.கே.நாராயணன் மற்றும் கோவா ஆளுநர் பி.வி.வான்ச்சூ ஆகியோரிடம் விசாரணை நடத்த மத்திய சட்ட அமைச்சகத்திடம் அனுமதி கேட்டுள்ளது சிபிஐ.
இந்த இருவரையும் வழக்கில் சாட்சிகளாக சேர்த்துள்ளது சிபிஐ. ஆனால் இருவரையும் சந்தேகப் பேர்வழிகளாக அது சேர்க்கவில்லையாம். இருவரிடமும் இந்த வழக்கு தொடர்பான சி்ல முக்கியக் கேள்விகளைக் கேட்க விரும்புவதாகவும் சட்ட அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளது சிபிஐ.
கடந்த 2005 மற்றும் 2006ல் ஹெலிகாப்டர் பரிவர்த்தனை தொடர்பாக நடந்த கூட்டங்களில் இந்த இருவரும் பங்கேற்றதாக தெரிகிறது.
அந்த சமயத்தில் நாராயணன் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்தார். வான்ச்சூ, சிறப்பு பாதுகாப்புப் படையின் தலைவராக இருந்தார். இவர்கள் இப்பொறுப்பில் இருந்தபோது நடந்த ஆலோசனைகளுக்குப் பின்னர்தான், அரசு கேட்டிருந்த ஹெலிகாப்டர்களுக்கான தொழில்நுட்ப அம்சங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், அகஸ்டா வெஸ்ட்லேன்ட், ஏலத்தில் தகுதி பெறவும் வழிவகுக்கப்பட்டுள்ளது.
எனவேதான் இதுதொடர்பாக இந்த இருவரிடமும் விசாரணை நடத்தி தகவல் சேகரிக்க சிபிஐ முயல்வதாக தெரிகிறது.
ஹெலிகாப்டர்களுக்கான செயல்திறன் தேவைகள் குறித்து விமானப்படை, தேசிய பாதுகாப்பு ஆலோசகர், எஸ்பிஜி எனப்படும் சிறப்புப் பாதுகாப்புப் டை, பாதுகாப்பு அமைச்சகம் ஆியோருக்கு இடையே 2005ம் ஆண்டு மார்ச் மற்றும் 2006 செப்டம்பர் மாத காலகட்டத்தில் பேச்சுக்கள் நடந்துள்ளன. விரிவான முறையில் இதுகுறித்து பேசப்பட்டுள்ளது. இந்த கூட்டங்களின்போதுதான் அரசு கோரியிருந்த தொழில்நுட்ப அம்சங்களில் மாற்றம் செய்துள்ளனர். இதுதான் அகஸ்டா உள்ளே நுழைய வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனவே இந்தக் கூட்டங்களில் பேசப்பட்டது என்ன என்ற விவரத்தை அறிய சிபிஐ ஆர்வம் காட்டுகிறது.எனவேதான் நாராயணனையும், வான்ச்சூவையும் அணுக அது முடிவு செய்துள்ளது.
தற்போது இந்த வழக்கு விசாரணை உச்சகட்டத்தை எட்டியுள்ளது. சிபிஐ அதிகாரிகள் குழு இத்தாலிக்குச் சென்று அங்கு இந்த ஹெலிகாப்டர் பேர ஊழலில் தொடர்புடைய சில முக்கிய இடைத் தரகர்களை சந்தித்து தகவல்களை சேகரிக்கவுள்ளனர். பரிமாறிக் கொள்ளப்பட்ட லஞ்சப் பணம் தொடர்பான விசாரணையாக இது அமையும்.
இந்த வழக்கில் முன்னாள் விமானப்படைத் தலைமைத் தளபதி எஸ்.பி. தியாகியின் பெயர் முக்கிய குற்றவாளிகள் வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளது என்பது நினைவிருக்கலாம்.