போலி பாஸ்போர்ட் வழக்கில் சோட்டா ராஜன் குற்றவாளி: சிபிஐ கோர்ட் அதிரடி!
கடந்த ஓராண்டாக டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடந்துவரும் போலி பாஸ்போர்ட் வழக்கில் சோட்டா ராஜன் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளார்.
டெல்லி: மும்பை நிழல் உலக தாதா சோட்டா ராஜன் மீதான போலி பாஸ்போர்ட் வழக்கில் குற்றவாளி என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நிழல் உலக தாதா சோட்டா ராஜன்,போலிபாஸ்போர்ட் உதவியுடன் இந்தியாவை விட்டுத் தப்பினார். அவரை மும்பை போலீசார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில்,கடந்த ஆண்டு இந்தோனேஷியாவில் பிடிபட்டார்.
அவரைப் பிடித்து வந்த போலீசார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் சிறையில் அடைத்தனர். பின்னர் அவரிடம் தொடர்ந்த விசாரணையில், கர்நாடக மாநிலத்தில் உள்ள மண்டியா முகவரியில் மோகன் குமார் என்ற பெயரில், சோட்டா ராஜனுக்கு, பெங்களூரு பாஸ்போர்ட் அலுவலகத்தில் போலி பாஸ்போர்ட் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்தது.
இதைப் பயன்படுத்தி, சுற்றுலா விசாவில் ஆஸ்திரேலியாவுக்கு சோட்டா ராஜன் கடந்த 2003ல் தப்பினார். இதனையடுத்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சோட்டா ராஜன் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதன் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இன்றைய விசாரணையின் போது சோட்டா ராஜன் உள்ளிட்ட 4 பேர் மீதான குற்றச் சாட்டு நிரூபணமானதால் அவர்களை குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார். மேலும், குற்றவாளிகளுக்கு தண்டனை தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.
அடுத்த விசாரணை நாளில் சோட்டா ராஜன் உள்ளிட்ட குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.