அத்தப்பூ கோலத்தை சுற்றி நடனமாடிய கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள்.. வைரலாகும் வீடியோ!
ஓணத்தின்போது கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் இந்து மத நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
திருவனந்தபுரம்: மலையாள மொழி பேசும் மக்களால் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் இந்து மக்களின் திருவாதிரக்களியாட்டம் ஆடி கொண்டாடிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.
மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக ஓணம் திருவிழாவை மலையாள மொழி பேசும் மக்கள் கொண்டாடுகின்றனர். 10 நாட்களும் வண்ணமயமான இந்த கொண்டாட்டத்தை அழகுபடுத்துவது அத்தப்பூக் கோலம். 10வது நாளில் ஓணம் சதயா கொடுத்து அத்தப் பூக் கோலத்தை சுற்றி நடனமாடி பெண்கள் வசந்த காலத்தை வரவேற்கும் நடனத்தை ஆடுவது வழக்கம்.
நேற்று முன்தினம் ஓணம் பண்டிகை சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. வழக்கமான உற்சாகத்துடன் அத்தப்பூ கோலமிடப்பட்டு பெண்கள் பாரம்பரிய உடையணிந்து திருவாதிரக் களியாட்டம் ஆடி மகிழ்ந்தனர்.
கன்னியாஸ்திரிகள் நடனம்
இதே போன்று கேரளாவைச் சேர்ந்த கிறித்தவ மத கன்னியாஸ்திரிகள் சிலர் அத்தப் பூ கோலத்தை சுற்றி திருவாதிரக்களி நடனமாடும் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன. 45 நிமிடங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள அந்த வீடியோவில் 10 பெண்கள் வெள்ளை உடையில் தலையில் கறுப்பு ஸ்கார்ப் அணிந்து அத்தப் பூக் கோலத்தை சுற்றி வந்து நடனமாடுகின்றனர்.
மகிழ்ச்சி
காலம் காலமாக பயிற்சி பெற்று நடனமாடும் இந்து மதத்தினரைப் போலவே நேர்த்தியாக அவர்கள் ஆடும் நடனம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் தலைவர் சசிதரூர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
திருவாதிரக்களி நடனம்
கேரளாவில் உள்ள மக்கள் வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக மலர் அலங்காரம் செய்தும், வாழை இலையில் பாரம்பரிய உணவுகள் வைத்து கடவுளை வழிபட்டனர். இந்த வீடியோ பதிவில் கிறிஸ்தவ சகோதரிகள் திருவாதிரக்களி ( இந்துக்களின் நடனம்) ஆடுகின்றனர்.
ஒற்றுமையின் அடையாளம்
கேரளாவில் ஓணத்தின் போது காணப்படும் மிக அரிதான நிகழ்வு இது. நான் அனைவரும் ஒற்றுமையாக , செழிப்போடு இருக்கிறோம் என்பதற்கான அடையாளம் இது. இது தான் கேரளாவை கடவுளின் சொந்த இடமாக வைத்துள்ளது என்றும் சசிதரூர் தன்னுடைய பதிவில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.