பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கு: துவங்கிய இடத்திற்கே வந்து நிற்கும் விசாரணை
பெங்களூர்: பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கந்த்வா சிறையில் இருந்து தப்பியோடிய 5 சிமி ஆதரவாளர்களுக்கு தொடர்பு உள்ளதா என்று போலீசார் மீண்டும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெங்களூரில் உள்ள சர்ச் தெருவில் இருக்கும் உணவகம் முன்பு நடந்த குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் பீகாரில் இருந்து 2 பேர் கடந்த வாரம் பெங்களூர் கொண்டு வரப்பட்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியும் எந்தவித உபயோகமான தகவலும் கிடைக்கவில்லை.
இதனால் விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
பீகார்
பீகாரில் இருந்து ஹைதர் அலி மற்றும் உமர் சித்திக்கி ஆகிய இருவர் கடந்த வாரம் பெங்களூர் அழைத்து வரப்பட்டனர். பாட்னா குண்டுவெடிப்பு வழக்கில் அவர்கள் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் பெங்களூர் போலீசார் பல மணிநேரம் விசாரணை நடத்தியும் உருப்படியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை. அவர்களுக்கு இந்த வழக்கில் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். பெங்களூரில் குண்டுவெடிப்பு நடந்தபோது அந்த 2 பேரும் சிறையில் இருந்தனர்.
சிமி
ஹைதர் மற்றும் உமருக்கு பெங்களூரில் பயன்படுத்தப்பட்ட குண்டுகள் பற்றி சில தகவல் தெரியும் என போலீசார் தெரிவித்துள்ளனர். பெங்களூரில் பயன்படுத்தப்பட்ட குண்டுகள் சிமி ஆதரவாளர்கள் பயன்படுத்தும் குண்டுகளை போன்று உள்ளது என்கிறார்கள் போலீசார்.
பீகார் போலீஸ்
பாட்னா குண்டுவெடிப்பு சம்பவத்தை நடத்த சிமி ஆதரவாளர்கள் எங்கிருந்து குண்டுகளை பெற்றனர் என்ற விவரத்தை அளிக்குமாறு பீகார் போலீசாரை பெங்களூர் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கைதிகள்
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கந்த்வா சிறையில் இருந்த சிமி ஆதரவாளர்கள் 5 பேர் கடந்த ஆண்டு தப்பியோடினர். அவர்கள் தாக்குதல் நடத்தவே தப்பியோடியதாக கூறப்பட்டது. அந்த 5 பேர் தான் சென்னை ரயில் தாக்குதலில் தொடர்புடையவர்கள் என்று தேசிய புலனாய்வு நிறுவனம் தெரிவித்தது. அவர்கள் பல வங்கிகளில் கொள்ளையடித்துள்ளனர்.
ம.பி. போலீஸ்
பெங்களூர் குண்டுவெடிப்புக்கும் அவர்களுக்கும் தொடர்பு உள்ளது என்று நினைத்த பெங்களூர் போலீசார் சிசிடிவி வீடியோவில் பதிவானதை மத்திய பிரதேச போலீசாருக்கு அனுப்பி வைத்தனர். அந்த வீடியோவை பார்த்த மத்திய பிரதேச போலீசார் கந்த்வா சிறையில் இருந்து தப்பித்தவர்கள் பெங்களூர் குண்டுவெடிப்பில் ஈடுபடவில்லை என்று தெரிவித்தனர்.
மீண்டும்
மத்திய பிரதேச மாநில சிறையில் இருந்து தப்பித்தவர்களுக்கும் பெங்களூர் குண்டுவெடிப்புக்கும் தொடர்பு உள்ளதா என போலீசார் மீண்டும் விசாரித்து வருகின்றனர்.
போன்
குண்டுவெடித்த சமயம் சர்ச் தெரு பகுதியில் இருந்து செய்யப்பட்ட 1.5 லட்சம் போன் கால்களை போலீசார் சோதனையிட்டது வீண்போனது. இதனால் விசாரணையில் மறுபடியும் தொய்வு ஏற்பட்டுள்ளது.