தரமில்லாத "பவர் பேங்குகளுடன்" ஏர் போர்ட் பக்கம் வந்துராதீங்க.. கொச்சி விமான நிலையத்தின் அதிரடி தடை!
பாதுகாப்பு காரணங்களால் இனி விமான நிலையங்களில் தரமில்லாத பவர் பேங்குகளை அனுமதிக்க முடியாது என்று கொச்சி விமான நிலைய திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கொச்சி : பாதுகாப்பு காரணங்களுக்காக இனி விமான நிலையங்களுக்குள் பயணிகள் தரமில்லாத பவர் பேங்குகளை கொண்டு வர கொச்சின் சர்வதேச விமான நிலையம் தடை விதித்துள்ளது. சில நேரங்களில் இந்த பவர் பேங்குகளை சக்திவாய்ந்த வெடிகுண்டுகளாக மாற்ற முடியும் என்பதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொச்சி விமான நிலையத்தில் கடந்த இரண்டு நாட்களாக பயணிகள் செக் இன் செய்யும் பைகளில் ரகசியமாக பவர் பேங்குகள் வைக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. பவர் பேங்குகள் என்பது மொபைல் சார்ஜ் செய்வதற்காக பயன்படுத்தப்படும் ஒரு சாதனம், அதனை சிலர் மறைத்து எடுத்துச் செல்லும் அடுத்தடுத்த நிகழ்வுகள் கொச்சின் சர்வதேச விமான நிலைய அதிகாரிகளை சந்தேகம் அடைய வைத்துள்ளது.
இதனையடுத்து விமானி நிலைய பாதுகாப்பு ஆணையகத்தின் கவனத்திற்கு இந்த விஷயத்தை கொச்சின் சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் கொண்டு சென்றனர். இதன் விளைவாக உள்ளூரில் தயாரிக்கப்படும், தரம் குறைந்த பவர் பேங்குகளை இனி பயணிகள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிராண்டட் பவர் பேங்குகளை கைப்பையில் வைத்து செல்லலாம், அதற்கு எந்தத் தடையும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று பவர்பேங்குகளை விமான கூரியர் அல்லது கார்கோ மூலம் அனுப்பவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உள்ளூரில் தயாரிக்கப்படும் பவர் பேங்குகளில் எளிதில் மாற்றம் செய்து அதனை சக்திவாய்ந்த வெடிகுண்டாக மாற்றி வெடிக்கச் செய்ய முடியும் என்ற பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகவே தடை விதிக்கப்படுவதாக கொச்சின் சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.