மகாத்மா காந்தி படுகொலை வழக்கில் எப்.ஐ.ஆர். போடப்பட்டதா? புது சர்ச்சை
டெல்லி: மகாத்மா காந்தி கொலை வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்), குற்றப்பத்திரிகை ஆகியவற்றின் நகல்களைக் கேட்டு தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்த ஒடிஸாவைச் சேர்ந்த சமூக ஆர்வலருக்கு அந்த ஆவணங்களை வழங்க வேண்டும் என்று மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30-ந் தேதி கோட்சேவால் மகாத்மா காந்தி சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். மகாத்மா காந்தி கொலை தொடர்பாக காவல் துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை நகல், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை நகல், மகாத்மா காந்தியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டதா? என்பது உள்ளிட்ட ஏழு விவரங்களைக் கேட்டு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் ஒடிஸாவைச் சேர்ந்த ஹேமந்த பாண்டே என்ற சமூக ஆர்வலர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இம் மனுவை தேசிய ஆவணக் காப்பகம், மகாத்மா காந்தி தனது கடைசி நாள்களில் தங்கியிருந்த பிர்லா இல்லமான தற்போதைய காந்தி ஸ்மிருதிக்கு உள்துறை அமைச்சகம் அனுப்பியது. அதையடுத்து, தங்கள் அலுவலகத்துக்கு நேரில் வந்து விவரங்களைக் கண்டறிந்து கொள்ளலாம் என்று மனுதாரருக்கு தேசிய ஆவணக் காப்பகம் கூறியது.
அதே நேரத்தில் மகாத்மா காந்தியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்படவில்லை என்று காந்தி ஸ்மிருதி அமைப்பு தெரிவித்திருந்தது. மேலும் மகாத்மா காந்தி கொலை வழக்கில் டெல்லியில் உள்ள துக்ளக் சாலை காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதாகவும், எனவே அது குறித்தும், குற்றப்பத்திரிகை குறித்தும் தங்களிடம் எந்த விவரமும் இல்லை எனவும் மனுதாரருக்குத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தாம் கேட்ட விவரங்கள் தரப்படவில்லை என்றும் அவற்றைத் தரும்படி மத்திய உள் துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியும், மத்திய தகவல் ஆணையத்தில் மனுதாரர் மேல்முறையீடு செய்தார்.
இந்த மேல்முறையீட்டை விசாரித்த தகவல் ஆணையர் சரத் சபர்வால், மனுதாரர் கோரிய மகாத்மா காந்தி கொலை தொடர்பான முதல் தகவல் அறிக்கை, குற்றப்பத்திரிகை ஆகியவை குறித்த விவரங்கள் மத்திய உள் துறை அமைச்சகம் அல்லது துக்ளக் சாலை காவல் நிலையம் ஆகியவற்றில் உள்ளதா என்பதை உள் துறை அமைச்சக பொது தகவல் அலுவலர் மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.