”சிகரெட் உற்பத்தியை நிறுத்தப் போகின்றோம்”- மத்திய அரசிற்கு மிரட்டல் விடுக்கும் நிறுவனங்கள்!
டெல்லி: மத்திய அரசின் புகையிலை தயாரிப்புகளில் பெரிய அளவிலான எச்சரிக்கை படம் குறித்த அறிவிப்பினைத் தொடர்ந்து உற்பத்தியை நிறுத்துவோம் என்று சிகரெட் கம்பெனிகள் மிரட்டல் விடுத்துள்ளன.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் உறுதிப் பிரமாணம் ஒன்றை தாக்கல் செய்தது. அதில் புகையிலை தயாரிப்புகளில் அவற்றின் இருபுறமும் 85 சதவிகித அளவில் எச்சரிக்கை படம் ஏப்ரல் 1, 2016 முதல் கட்டாயம் இடம்பெறவேண்டுமென கூறியது.
இதனை எதிர்த்து ஐ.டி.சி, கோட்ப்ரே பிலிப்ஸ் உள்ளிட்ட அனைத்து இந்திய சிகரெட் கம்பெனிகளும் ஏப்ரல் 1 முதல் உற்பத்தியை நிறுத்துவதென முடிவுசெய்திருக்கின்றன. இதனால் நாளொன்றுக்கு அரசுக்கு ரூ 350 கோடி நஷ்டம் ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் இந்திய புகையிலை நிறுவனத்தின் இயக்குநர் செய்யது முகமது அகமத், இவ்விஷயத்தில் விளக்கம் வேண்டி சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியிருப்பதாக தெரிவித்துள்ளார்.