சரஸ்வதி வணக்கம் நடத்த கோரி பள்ளிகளுக்கு சுற்றறிக்கை - குஜராத்தில் புது சர்ச்சை!
அகமதாபாத்: குஜராத்தில் பள்ளிகளில் சரஸ்வதி வணக்கம் நடத்தக் கோரி சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது புது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அகமதாபாத் மாநகராட்சிக்குட்பட்ட ஒரு உருது பள்ளி உள்பட அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் நாளை வசந்த பஞ்சமியை முன்னிட்டு அனைத்து பள்ளிகளும் சரஸ்வதி வணக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என கூறபட்டு உள்ளது.
பள்ளி அதிகாரிகள் பள்ளி இறை வணக்கத்தின் போது சரஸ்வதி வணக்கத்தை நடத்தும் படி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.
அந்த சுற்றறிக்கையில் வசந்த பஞ்சமியையொட்டி அறிவுக்கடவுள் சரஸ்வதி தேவியை நினைவு கூற வேண்டும். இதனால் மாணவர்களூக்கு கல்வியின் முக்கியத்தும் புரியும். பள்ளிகள் சரசுவதி பூஜைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மாணவர்களை சரஸ்வதி வணக்கம் செலுத்த செய்ய வேண்டும். மற்ற மாநிலங்களில் வசந்த பஞ்சமி எவ்வாறு கொண்டாடப்படுகிறது என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டு உள்ளது.
இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாரதிய ஜனதா இந்துத்துவா கொள்ளைகையை அகமதாபாத் மாநகராட்சியில் புகுத்துகிறது என அக்கட்சி குற்றம் சாட்டி உள்ளது.