சுனந்தாவுக்கு அல்பிரஸோலம் விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் - எப்.ஐ.ஆர்.
டெல்லி: சந்தர்ப்ப சூழ்நிலையை வைத்துப் பார்க்கும்போது சுனந்தா புஷ்கருக்கு அல்பிரஸோலம் (alprazolam) விஷம் கொடுத்திருக்கலாம் என்று முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த, விஷம் காரணமாகவே சுனந்தா உயிரிழந்திருக்கலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் அவரைக் கட்டாயப்படுத்தி இந்த விஷத்தை செலுத்தும்போது அவர் போராடியிருக்கலாம்.
அவரது உடல் காயங்கள் அதைத்தான் கூறுவதாக தெரிகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது உடலில் பற்களால் கடித்த தடம், ஊசி போட்ட தடம் ஆகியவையும் காணப்படுகின்றன.
இதுதொடர்பாக டெல்லி போலீஸார் தாக்கல் செய்துள்ள 3 பக்க முதல் தகவல் அறிக்கையில், "அல்பிரஸோலம் விஷம் கொடுத்து சுனந்தா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பது சந்தர்ப்ப சூழ்நிலைகள் கருத வைக்கின்றன. அவருக்கு வாய் வழியாக இந்த விஷத்தை செலுத்தியிருக்கலாம்.
அதேசமயம், ஊசி மூலம் போட்டிருக்கலாம் என்பதையும் மறுப்பதறகில்லை. மேலும் அவரது உடலில் உள்ள காயங்களைப் பார்க்கும்போது அவரை கட்டாயப்படுத்தி வற்புறுத்தி அதைச் செய்திருக்கலாம் என்று சந்தேகிக்க வைக்கிறது. அவரது உடலில் உள்ள ஒரு காயம் ஊசி போட்டதால் வந்த தடமாகும். இன்னொரு காயம் பல் கடியால் வந்தது.
மேலும் 1 முதல் 15 எண் கொண்ட காயங்கள் மரணத்திற்கு முன்பு 12 மணி நேரம் முதல் 4 நாட்கள் வரையிலான காலட்டத்தில் ஏற்பட்டவையாகும்.
2014, டிசம்பர் 29ம் தேதி கிடைத்த ஆட்டாப்சி அறிக்கையின் படி, 52 வயதான சுனந்தா புஷ்கர் எந்தவிதமான நோயாலும் பாதிக்ப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது. அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன்தான் இருந்துள்ளார். எனவே அவர் இயற்கையாக மரணமடைந்திருக்க வாய்ப்பில்லை. அவரது மரணத்திற்கு விஷமே காரணமாகும்.
2014ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி சரோஜினி நகர் காவல் நிலைய நிலைய அதிகாரி அதுல் சூட்டுக்கு சசி தரூரின் தனிச் செயலாளர் அபினவ் குமாரிடமிருந்து ஒரு போன் வந்தது. அதில், ஹோட்டல் லீலா பாலஸ் ஹோட்டல் அறை எண் 345ல் தங்கியிருந்த சுனந்தா புஷ்கர் ஏதோ செய்து கொண்டு விட்டார் என்று கூறியுள்ளார் அபினவ் குமார்.
அந்த ஹோட்டலுக்கு ஜனவரி 15ம் தேதி மாலை 5.48 மணிக்கு வந்து அறை எடுத்துள்ளார் சுனந்தா. அவரது உடலில் முதல் ஆட்டாப்சியை எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் செய்தனர். அதில் விஷமே மரணத்திற்குக் காரணமாக இருக்கலாம் என்று அவர்கள் கூறியிருந்தனர். இதுதொடர்பாக மேலும் விசாரணை நடத்துமாறு மாஜிஸ்திரேட்டும் உத்தரவிட்டார்.
குடல் உள்ளிட்ட உடல் உள்ளுறுப்புகளின் மாதிரி சோதனையை விரைவாக நடத்துமாறும் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட துணிகள், மருந்துகள் உள்ளிட்டவையும் சோதனைக்கு ஜனவரி 20ம் தேதி அனுப்பப்பட்டன.
கடந்த மார்ச் மாதம்தான் உள் உறுப்புகளின் மாதிரி தொடர்பான சோதனை முடிவுகள் வந்தன. அதைத் தொடர்ந்து செப்டம்பரில் ஆட்டாப்சி அறிக்கை வந்தது. அதில் விஷம் காரணமாக மரணம் நேரிட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது" என்று முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.