குடியுரிமை சட்டம் எதிர்ப்பு போராட்டம்- பற்றி எரியும் மே.வங்கம்... இணைய சேவைகள் துண்டிப்பு
கொல்கத்தா: குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் படுதீவிரமடைந்துள்ளதால் மேற்கு வங்க மாநிலத்தில் பல பகுதிகளில் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
வடகிழக்கு மாநிலங்களைத் தொடர்து மேற்கு வங்கத்திலும் குடியுரிமை மசோதாவுக்கு எதிரான போராட்டம் கொழுந்துவிட்டு எரிகிறது. இம்மாநிலத்தில் ரயில்கள், ரயில் நிலையங்கள், பேருந்துகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து ஒடிஷா, மேற்குவங்கம் செல்லும் பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை சென்ட்ரலில் இருந்து விஜயவாடா வரை மட்டுமே ரயில்கள் இயக்கப்படுகின்றன.
வடக்கு 24 பர்கானா, ஹவுரா, முர்சிதாபாத் உள்ளிட்ட பல இடங்களில் இன்று காலை முதல் தேசிய நெடுஞ்சாலைகளை மறித்து போராட்டங்கள் நடைபெறுகின்றன. இதனால் சாலைகளில் வாகனப்போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளன.
இதனையடுத்து மேற்கு வங்கத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ள பகுதிகளில் இணையசேவைகளை துண்டிப்பதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அஸ்ஸாமிலும் திங்கள்கிழமை வரை 10 மாவட்டங்களில் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் குடியுரிமை மசோதாவை ஆதரித்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ள அஸ்ஸாம் கன பரிஷத் தொண்டர்கள், கட்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் அஸ்ஸாம் கன பரிஷத்தின் 3 அமைச்சர்கள் பதவி விலகவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.