பெங்களூரில் நடுத்தெருவில் கிடந்த முதலை: ஓடிவந்து பள்ளத்தை மூடிய அதிகாரிகள்
பெங்களூர்: பெங்களூர் சுல்தான்பாள்யா மெயின் ரோட்டில் கலைஞர் ஒருவர் முதலையை கொண்டு வந்து போட்ட பிறகு அங்கிருந்த பெரிய பள்ளத்தை மாநகராட்சி அதிகாரிகள் மூடியுள்ளனர்.
பெங்களூரில் உள்ள சுல்தான்பாள்யா மெயின் ரோட்டில் ஒரு பெரிய பள்ளம் இருந்தது. தண்ணீர் பைப்பும் உடைந்து கிடந்தது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பயனில்லை. இந்நிலையில் பெங்களூரைச் சேர்ந்த கலைஞர் பாதல் நஞ்சுண்டசாமி(36) என்பவர் அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்க முடிவு செய்தார்.
ரூ.6 ஆயிரம் செலவில் பைபரில் ஒரு பெரிய முதலையை செய்து சுல்தான்பாள்யா மெயின் ரோட்டில் உள்ள பெரிய பள்ளத்தில் கொண்டு வந்துபோட்டார். பள்ளத்தில் நீரில் மிதந்த முதலையை பார்த்த மக்கள் அது நிஜமானது என்று நினைத்துவிட்டனர். இதனால் அங்கு கூட்டம் கூடியது.
முதலையால் ஏற்பட்ட பரபரப்புக்கு பிறகு அந்த பள்ளத்தை மாநகராட்சி அதிகாரிகள் மூடியுள்ளனர். இது குறித்து நஞ்சுண்டசாமி கூறுகையில்,
ஒரு மாதத்திற்கு முன்பு குடிநீர் பைப் உடைந்தது. அதன் பிறகு பெய்த மழை மற்றும் போக்குவரத்தால் சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டது. அந்த பள்ளத்தை மூட அதிகாரிகள் முயற்சி செய்யவில்லை. அதனால் தான் அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்க இவ்வாறு செய்தேன் என்றார்.