சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு.. தமிழக அளவில் மாணவி சரண்யா ஹரி சாதனை !
டெல்லி: 2015ம் ஆண்டுக்கான சிவில் பதவிகளுக்கான யுபிஎஸ்சி தேர்வுக்கான இறுதி முடிவுகளை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) இன்று வெளியிட்டுள்ளது. இதில் தமிழக அளவில் சரண்யா ஹரி முதலிடம் பிடித்துள்ளார்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட மத்திய அரசின் சிவில் பதவிகளுக்கான யுபிஎஸ்சி உள்ளிட்ட தேர்வுகளை மத்தியப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் நடத்துகிறது.
அந்த வகையில், கடந்த ஆண்டு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பணியிடங்களுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்பட்டது. முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பிரதான தேர்வு எழுதினர்.
இந்நிலையில், 2015ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் பிரதான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில், இந்தியா முழுவதும் 1078 பேர் தேர்ச்சி பெற்றனர். அதில் டெல்லியைச் சேர்ந்த டினா டாபி இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் அத்தர் அமீர் உல் ஷபீர் கான் 2-வது இடம் பிடித்துள்ளார்.
தமிழக அளவில் சரண்யா ஹரி முதலிடத்தையும், அகில இந்திய அளவில் 7வது இடத்தையும் பிடித்துள்ளார். ஐஏஎஸ் (180 பேர்), ஐஎஃப்எஸ் (45 பேர்), ஐபிஎஸ் (150) மற்றும் குரூப் ஏ (728) மற்றும் குரூப் பி (61) என யுபிஎஸ்சி தேர்வில் 1078 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி பெற்றவர்களுக்கு இம்மாதம் நேர்முகத்தேர்வு நடத்தப்படும். அப்போது மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு காலியாக உள்ள உயர் பதவிகளுக்கு பணியமர்த்தப்படுவார்கள்.
தேர்வு முடிவுகள் யுபிஎஸ்சி (upsc.gov.in) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.