தனக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நீதிபதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா
தனக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நீதிபதிகளுடன் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இன்று பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.
டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதும்,நீதித்துறை நிர்வாகம் மீதும் புகார் கூறி போர்க்கொடி தூக்கிய நான்கு நீதிபதிகளிடமும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இன்று சமரச பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.
சமீபத்தில் இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகூர், குரியன் ஜோசப் ஆகியோர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையின் கீழ் நீதித்துறை நிர்வாகம் சரியாக செயல்படுவதில்லை என குறிப்பிட்டனர்.
அப்போது, வழக்கை ஒதுக்கீடு செய்வதில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தன்னிச்சையாக நடந்து கொள்வதாக மூத்த நீதிபதிகள் வெளிப்படையாக புகார் கூறினர். நீதிபதிகளுக்கு வழக்குகளை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாக புகார் தெரிவித்தனர். நீதித்துறைக்கு மூத்த நீதிபதிகளான தாங்கள் தான் பொறுப்பு என்று அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் நீதி நிர்வாகத்தை சரியாக்காவிட்டால் ஜனநாயகத்துக்கு இது ஆபத்து என்றும் அவர்கள் கூறினர். இரண்டு மாதங்களுக்கு முன்பு நான்கு நீதிபதிகளும் இதுகுறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பினோம்.
ஆனால், அதன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். வேறுவழியில்லாமல் நாட்டு மக்களை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டதாக கூறினர்.
இந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் சமரசம் ஏற்படுத்த இந்திய பார் கவுன்சில் நடவடிக்கை எடுத்து வந்தது. இரண்டொரு நாளில் இந்த பிரச்னை முடிவுக்கு வரும் என அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் கூறியிருந்தார்.
இந்நிலையில் போர்க்கொடி தூக்கிய நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகோய், மதன் லோகூர், குரியன் ஜோசப் ஆகியோரை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இன்று தனது அறைக்கு வரவழைத்து சமரசம் பேசினார்.
இச்சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் நீடித்தது. அப்போது தலைமை நீதிபதி, இந்த பிரச்னையை நாமே பேசி தீர்த்து கொள்ளலாம் என கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சமரச பேச்சு நாளையும் தொடரும் என தெரிகிறது.