அத்தனை முக்கிய வழக்குகளையுமே இனி தலைமை நீதிபதிதான் விசாரிப்பாராம்!
டெல்லி: அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் அனைத்தையும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவே விசாரிக்க இருக்கிறார்.
உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கு வழக்குகளை ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டப்படுவதாக மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் தலைமையில் 4 நீதிபதிகள் பகிரங்கமாக குற்றச்சாட்டின. இது நாட்டின் நீதித்துறை வரலாற்றில் பெரும் பரபரப்பை கிளப்பியது.
இதையடுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்க வகை செய்யும் இம்பீச்மென்ட் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய இடதுசாரிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இது தொடர்பாக அனைத்து கட்சிகளுடன் இடதுசாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றன.
அதிகாரப்பூர்வமாக வெளியீடு
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் http://supremecourtofindia.nic.in/judges-roster-0 எந்தெந்த வழக்குகள் எந்தெந்த நீதிபதிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது வரும் 5-ந் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி பகிரங்கமாக அறிவிப்பது என்பது இதுதான் முதல் முறை.
அனைத்து முக்கிய வழக்குகள்
மொத்தம் 13 பக்கங்களில் இந்த வழக்கு ஒதுக்கீடு விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இனி அனைத்து பொதுநலன் வழக்குகள், தேர்தல் வழக்குகள், கிரிமினல் வழக்குகள், சமூக நீதி வழக்குகள் மற்றும் அரசியல் சாசன நியமனங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிப்பார்.
நீதிபதி கோகோய்க்கு...
நீதிபதி செல்லமேஸ்வர், தொழிலாளர்கள், மறைமுக வரிகள், கிரிமினல் வழக்குகள், நுகர்வோர் பாதுகாப்பு வழக்குகளை விசாரிப்பார். அடுத்த தலைமை நீதிபதியாகக் கூடும் என எதிர்பார்க்கப்படும் ரஞ்சன் கோகோய், தொழிலாளர் நலன், மறைமுக வரிகள், கிரிமினல், தனிநபர் சட்டம் மற்றும் மதம் சார்ந்த வழக்குகளை விசாரிக்க இருக்கிறார்.
யார் யாருக்கு ஒதுக்கீடு?
நீதிபதி மதன் லோகுருக்கு சூழலியல், நுகர்வோர் பாதுகாப்பு, சுரங்கம் மற்றும் கனிம வளங்கள், தனிநபர் சட்டம், ராணுவம் மற்றும் துணை ராணுவம் தொடர்பான வழக்குகள் ஒதுக்கீடு செய்யப்படும். நீதிபதி குரியன் ஜோசப்புக்கு தொழிலாளர் நலன், கிரைம் மற்றும் குடும்ப நல விவகாரங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.