சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு எதிரான இம்பீச்மென்ட் வழக்கு.. திடீர் திருப்பத்தால் மனு தள்ளுபடி
காங்கிரஸ் எம்பிக்களான பிரதாப் சிங் பஜ்வா, அமீ ஹர்ஷத்ரே யாஜ்னிக் ஆகியோர் சார்பில், கட்சியின் மூத்த தலைவரும், சட்ட வல்லுநருமான கபில் சிபல் இந்த வழக்கை தாக்கல் செய்தார்.
Recommended Video
டெல்லி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு எதிரான இம்பீச்மென்ட் வழக்கை வாபஸ் பெற்றார் கபில் சிபல். இதன் மூலம் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
உச்சநீதிமன்றத்தில் வழக்குகளை விசாரணைக்கு ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவிநீக்க தீர்மானம் கொண்டு வர அனுமதிக்குமாறு ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடுவிடம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் நோட்டீஸ் கொடுத்தனர்.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை எனக்கூறி நோட்டீசை வெங்கையா நாயுடு ஏற்கமறுத்தார். இதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி உச்ச நீதிமன்றத்தில், நேற்று வழக்கு தொடர்ந்தது.
வழக்கு விசாரணை
காங்கிரஸ் எம்பிக்களான பிரதாப் சிங் பஜ்வா, அமீ ஹர்ஷத்ரே யாஜ்னிக் ஆகியோர் சார்பில், கட்சியின் மூத்த தலைவரும், சட்ட வல்லுநருமான கபில் சிபல் இந்த வழக்கை தாக்கல் செய்தார். நீதிபதிகள் செல்லமேஸ்வர், எஸ்.கே.கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கை தாக்கல் செய்த கபில்சிபல், இதை அவசரமாக விசாரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த நிலையில், இவ்வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
சீனியர்கள் இல்லை
நீதிபதி ஏ.கே.சிக்ரி, தலைமையிலான இந்த அமர்வில் நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே என்.வி.ரமணா, அருண்மிஸ்ரா, ஏ.கே.கோயல் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர். முக்கியமான வழக்கை சீனியர் நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் விசாரிக்கவில்லையே என்ற ஆதங்கம் காங்கிரஸ் வட்டாரத்தில் எழுந்தது.
உத்தரவு நகல் தேவை
இதையடுத்து, இன்று வாதத்தை துவக்கிய கபில் சிபல், இந்த வழக்கை விசாரிக்க, 5 நீதிபதிகள் பெஞ்ச் அமைத்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பிறப்பித்த உத்தரவு நகலை தனக்கு வழங்கும்படி கோரிக்கை விடுத்தார். ஆனால், உச்சநீதிமன்ற பெஞ்ச், இதை ஏற்கவில்லை. உங்களுக்கு எதற்காக அந்த நகல் தேவை என திரும்ப, திரும்ப கேள்வி எழுப்பியது. வழக்கின் அடிப்படையை வைத்து வாதத்தை முன் வையுங்கள் என நீதிபதிகள் கோரிக்கைவிடுத்தனர்.
வழக்கு வாபஸ்
ஆனால், இதை கபில் சிபல் ஏற்கவில்லை. தலைமை நீதிபதியின் உத்தரவு நகலை வழங்காவிட்டால் இந்த வழக்கை நடத்தி பலன் இல்லை என்று கூறிய கபில் சிபல், காங் எம்.பி.க்கள் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெறப்போவதாக தெரிவித்தார். இதையடுத்து வழக்கு தள்ளுபடியானது. தலைமை நீதிபதிதான் தனக்கு எதிரான வழக்கை விசாரிக்கும் நீதிபதிகளையும் தேர்வு செய்தார் என்பதும், சீனியர் நீதிபதிகளை இந்த பெஞ்ச்சில் சேர்க்கவில்லை என்பதும் காங்கிரஸ் தரப்பு விமர்சனமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.