நீதிபதி கர்ணனுக்கு எதிராக விசாரணை.. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அதிரடி உத்தரவு
டெல்லி: சர்ச்சைக்குரிய நீதிபதி சி.எஸ். கர்ணனுக்கு எதிரான புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன். இவரது செயல்பாடுகள் சமீப காலமாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தன. இவர் பிறப்பித்த அதிரடி உத்தரவுகளால் நீதித்துறையே பரபரப்பில் மூழ்கியது. சமீபத்தில் இவரை கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கும் இவர் அதிரடியாக தடை விதித்தார்.
இந்த நிலையில் இவருக்கு எந்த வழக்குகளையும் ஒதுக்க வேண்டாம் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தாக்கூர் உத்தரவிட்டார். அதற்கும் தடை விதித்தார் கர்ணன். மேலும் ஜாதி வெறி பிடித்த இந்த நாட்டை விட்டு வெளியேறப் போவதாகவும் அவர் அறிவித்தார்.
இருப்பினும் அவர் அடுத்த நாளே டெல்லி சென்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியைச் சந்தித்து விளக்கம் அளித்தார். பின்னர் மனச் சமநிலையின்மையால் தான் தவறான உத்தரவுகளைப் பிறப்பித்து விட்டதாக தெரிவித்தார். தனது நிலையிலிருந்தும் பின்வாங்கினார்.
மேலும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு வருத்தம் தெரிவித்து கடிதமும் எழுதினார். இருப்பினும் தற்போது கர்ணனுக்கு எதிராக உச்சநீதிமன்றம் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அவர் மீது விசாரணை நடத்துமாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தாக்கூர் உத்தரவிட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விசாரணையை நடத்த 3பேர் கொண்ட கமிட்டியையும் அமைக்க உத்தரவிட்டுள்ளார் நீதிபதி தாக்கூர். துறை ரீதியிலான இந்த விசாரணையை மிகவும் விரிவாக நடத்துமாறும் நீதிபதி தாக்கூர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கெளலுக்கு நீதிபதி தாக்கூர் எழுதியுள்ள கடிதத்தில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் குறித்த கர்ணன் தெரிவித்துள்ள புகார்கள் தொடர்பாக அவரிடமிருந்து விளக்கம் பெறப்பட வேண்டும். அவரது புகார்கள் குறித்தும், அவரது நடத்தை குறித்தும் விரிவா்க விசாரிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.