அடித்துக் கொள்ளும் மகன்கள்.. தீரா துயரத்தில் லாலு பிரசாத்.. பரபரக்கும் பீகார் அரசியல்!
சென்னை: பீகார் முன்னாள் முதல்வர் லாலுப் பிரசாத் யாதவின் மகன்கள் மீண்டும் அடித்துக் கொள்ள ஆரம்பித்துள்ளனர். இதனால் பீகார் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலுபிரசாத் யாதவ் கால்நடை தீவன வழக்கில் சிறை சென்றுள்ளதால் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைமை பொறுப்பை லாலுவின் இளைய மகன் தேஜஸ்வி பிரசாத் யாதவ் கவனித்து வருகிறார்.
தேஜஸ்வி பிரசாத் கட்சிப் பொறுப்புகளை கவனிக்க தொடங்கியதில் இருந்தே லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், தம்பி தேஜஸ்வி மீது அதிருப்தியில் இருந்துள்ளார். இந்நிலையில் மக்களவை தேர்தலில் பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளமும் பாஜகவும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. ராஷ்ட்ரிய ஜனதா தளம் காங்கிரசோடு கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
டெல்லியில் முகாமிட்ட பிரகாஷ் ராஜ்.. ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்காக தீவிர பிரச்சாரம்
அண்ணன் தம்பி சண்டை
இவர்களோடு பீகார் மாநிலக் கட்சிகளான ராஷ்ட்ரிய லோக்சமதா, இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மத சார்பற்றது), விகாஷீல் இன்சான் ஆகிய கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ளன. இவர்களுக்குள் தொகுதி ஒதுக்கீடு நடைபெற்றபோதே லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவின் ஆதரவாளர்களுக்கு சீட் கொடுக்கவில்லை. இதனால் தேஜ் பிரதாப் அப்போதே தம்பியுடன் மோதலில் ஈடுபட்டுள்ளார். அதோடு கூட்டணி கட்சியினருடன் பேச்சு வார்த்தை நடைபெற்றபோதும் தேஜ் பிரதாப் யாதவ் ஒதுக்கப்பட்டுள்ளார்.
மாஜி மாமனாருக்கு சீட்
லாலு பிரசாத் யாதவ் வழக்கமாக போட்டியிடும் சரண் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவார். ஆனால் இம்முறை அவர் கால்நடை தீவன வழக்கில் சிறையில் இருப்பதால் கட்சி பொறுப்புகளை கவனித்து வரும் தேஜஸ்வி அந்த தொகுதியை தனது அண்ணன் தேஜ் பிரதாபின் முன்னாள் மாமனார் சந்திரிகா ராய்க்கு டுத்தார். இதுவும் தேஜ் பிரதாபுக்கு பிடிக்கவில்லை. இந்நிலையில் கடந்த மாதம் தேஜ் பிரதாபின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் தேஜ் பிரதாப் தனது தம்பி தேஜஸ்வியுடன் சிரித்த முகத்துடன் கலகலப்பாகவே காணப்பட்டார். ஆனால் இந்த ஒற்றுமை நீண்ட காலத்துக்கு நீடிக்கவில்லை.
தம்பி மீது விமர்சனம்
இந்த நிலையில் தேஜ் பிரதாப் ஆர்ஜேடி வேட்பாளர் சந்திர பிரகாஷை ஆதரித்து ஜகனாபாத்தில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் "எனது தந்தை லாலு ஆற்றல் மிகுந்தவர். நாள்தோறும் 10- 12 நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்பார். ஆனால் இப்போதுள்ள தலைவர்கள் 2 - 4 நிகழ்ச்சிகளிலேயே உடல்நலக் குறைவால் படுத்து விடுகின்றனர்" என்று தனது தம்பி தேஜஸ்வி யாதவை குறை கூறி பேசினார்.
2வது லாலு
ஏனெனில் தேஜஸ்வி யாதவ் சமீபகாலமாக தனது தேர்தல் பிரச்சார நிகழ்ச்சிகளை தனக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறி ரத்து செய்து வருகிறார். இது மட்டுமல்லாது தொடர்ந்து பேசிய தேஜ் பிரதாப் "நான் லாலுவின் ரத்தம். லாலுவே எனது கடவுள். எனது குரு. நானே பிஹாரின் இரண்டாவது லாலு" என்றும் பேசினார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லாலுவுக்கு பிறகு தேஜஸ்வி பிரசாத் கட்சியின் தலைமை பொறுப்புகளுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேஜ் பிரதாப்பின் பேச்சு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.