காஷ்மீரில் பயங்கர வன்முறை... போலீசார்- போராட்டக்காரர்கள் இடையே கடும் மோதல்!!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் போலி என்கவுண்ட்டருக்கு எதிரான போராட்டத்தில் பயங்கர வன்முறை வெடித்தது. போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையேயான கடுமையான மோதல் ஏற்பட்டது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 2 இளைஞர்கள் அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு எதிராக தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் காஷ்மீர் பிரிவினைவாத இயக்கமான ஹூரியத் மாநாட்டு கட்சியின் தலைவர் சையத் அலி ஷா கிலானி நேற்று முன்தினம் ஸ்ரீநகர் திரும்பியிருந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த வரவேற்பு பேரணியில் மஸ்ரத் ஆலம் உள்ளிட்ட பிரிவினைவாத இயக்கத்தினர் ஏராளாமானோர் கலந்து கொண்டனர். அத்துடன் பாகிஸ்தான் நாட்டு கொடிகளும் பறக்கவிடப்பட்டன.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் மஸ்ரத் ஆலம் இன்று கைது செய்யப்பட்டார். இதனிடையே புல்வாமா மாவட்டம் திரால் நகரில் இன்று போலி என்கவுண்ட்டருக்கு எதிரான பேரணியில் கிலானி கலந்து கொள்ள இருந்தார். ஆனால் இதை அனுமதிக்காத போலீசார் அவரை வீட்டுக் காவலில் வைத்தனர்.
இதனால் ஜம்மு காஷ்மீரில் பெரும் கொந்தளிப்பான நிலை உருவானது. இந்த கொந்தளிப்புக்கு மத்தியில் போலி என்கவுண்ட்டருக்கு எதிரான போராட்டத்துக்காக இன்று திரால் நகரை நோக்கி பேரணியாக சென்றவர்கள் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனை தொடர்ந்து அங்கு போலீசாருடன் கடும் மோதல் ஏற்பட்டது.
போலீசார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இந்த மோதல்களால் அந்த பகுதியே போர்க்களம் போன்று காட்சி அளித்தது.
இன்றைய போராட்டத்தின் போதும் பாகிஸ்தான் தேசிய கொடியை போராட்டக்காரர்கள் ஏந்தி அந்நாட்டுக்கு ஆதரவாக முழக்கமிட்டனர்.
இப் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய மிர்வாய்ஸ் பரூக் பேசுகையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள மக்கள் ஜனநாயக கட்சியின் அரசு பாரதிய ஜனதாவிடம் சரண் அடைந்தது மிகவும் துரதிஷ்டவசமானது. ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்ட பிரச்சனையால் அப்பாவி பொதுமக்கள் கொலை செய்யப்படுகின்றனர். திராலில் நடைபெற்ற போலி எண்கவுண்டர் தொடர்பாக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. யாரும் கைது செய்யப்படவில்லை. இதுதொடர்பாக அரசு தெளிவான அறிக்கையை அளிக்கவில்லை.
நாங்கள் விசாரணை நடத்த கோரிக்கை விடுக்கிறோம்... ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை விலக்குவதற்கான காலம் இது.... என்றார்.