கிராமப் பாதுகாப்பு குழுக்களைக் கலைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்... யாசின் மாலிக் கைதால் ஸ்ரீநகரில் மோதல்
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்கத்தின் தலைவரான யாசின் மாலிக் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஸ்ரீநகரில் பல்வேறு இடங்களில் மோதல் வெடித்தது.
காஷ்மீரை தனிநாடாக அறிவிக்க வேண்டும் என பிரிவினைவாத இயக்கமான ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்கத்தின் தலைவரான யாசின் மாலிக் போராடி வருகிறார்.
இந்நிலையில், இன்று மைசூமா, கவ்காடல் மற்றும் லால் சவுக் பகுதிகளில் ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்கத்தின் தலைவரான யாசின் மாலிக் தலைமையில், கிராமப் பாதுகாப்பு குழுக்களைக் கலைக்கக் கோரி போராட்டம் நடைபெற்றது.
போராட்டக்காரர்கள் சிட்டி செண்டர் அருகில் வந்தபோது, போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். அதோடு யாசின் மாலிக்கையும் அவர்கள் கைது செய்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். கற்களை வீசியும் அவர்கள் தாக்கினர். போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி, அவர்களைக் கலைத்தனர்.
யாசின் மாலிக் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஸ்ரீநகரின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.
இதற்கிடையே ஹுரியத் எனப்படும் பிரிவினைவாத இயக்கத்தின் மூத்த தலைவர் சையத் அலி ஷா கிலானி கிராமப் பாதுகாப்பு குழுக்களைக் கலைக்கக் கோரி நாளை கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.