உ.பி. அமைச்சருக்கு எதிராக பேஸ்புக்கில் போஸ்ட்... பிளஸ் 1 மாணவர் கைது... 14 நாட்கள் சிறை!
பரேலி: உத்திரப்பிரதேசத்தில் அமைச்சர் அஸம் கான் பெயரில் போலியான கருத்தை பேஸ்புக்கில் பரப்பியதாக 11ம் வகுப்பு மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்திரப்பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள பிரபல பொது பள்ளியில் படிக்கும் 11-ம் வகுப்பு மாணவன், சமீபத்தில் தனது பேஸ்புக் பக்கத்தில் மாநில நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் அஸம் கானுக்கு எதிராக தகவல் ஒன்றைப் போஸ்ட் செய்திருந்ததாகக் கூறப்படுகிறது. அஸம்கான் கூறியதாக ஒரு கருத்தை அதில் அவர் போட்டிருந்தாராம்.
அந்த போஸ்டில் அஸம் கானுக்கு எதிராக அம்மாணவர் தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தி இருந்ததாகவும், இது இரு சமூகத்தினரிடையே பகையை உருவாக்கும் என்றும் அஸம்கானின் செயலாளர் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாணவரைக் கைது செய்த போலீசார், அவனைக் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, மாணவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்கும்படி உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து அம்மாணவர் மாவட்ட சிறையில் அடைக்கப் பட்டார்.
ஆனால், ஆட்சேபனைக்குரிய அந்த கருத்தினை தனது மகன் பேஸ்புக்கில் அப்லோடு செய்யவில்லை என்றும், நண்பர்களிடம் இருந்து வந்த தகவலை ஷேர் செய்ததாகவும் அவனது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அதேபோல நான் எழுதியதன் உண்மையான அர்த்தம் தனக்குத் தெரியாமல் போய் விட்டதாக அந்த மாணவனும் கூறியுள்ளதாக ராம்பூர் மாவட்ட எஸ்.பி. சத்னா கோஸ்வாமி கூறியுள்ளார்.