"காந்தி ஜெயந்தி" விடுமுறை ரத்து - 'இந்துத்துவா' வேலையை காட்டும் மோடி சர்க்கார்!
டெல்லி: நாட்டின் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2-ந் தேதி அரசு விடுமுறை நாள். ஆனால் மகாத்மா காந்தியின் பெயராலேயே மத்திய மோடி சர்க்கார் இந்த விடுமுறை நாளை ரத்து செய்து தனது இந்துத்துவா கொள்கையை வெளிப்படுத்தியுள்ளது.
மத்தியில் பாரதிய ஜனதா அரசு அமைகிற போதெல்லாம் ஆகக் கூடுமானவரை தனது "இந்துத்துவா" செயல்திட்டத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் செயல்படுத்துவதில் எப்போதும் முனைப்பு காட்டத்தான் செய்கிறது.
பாரதிய ஜனதா கட்சி ஆதரவுடன் வி.பி.சிங் ஆட்சி நடத்திய காலம் தொட்டு இதே பாணியைத்தான் பாஜக அரசு கடைபிடித்து வருகிறது. அப்போது பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நிறைவேற்ற வி.பி.சிங். உத்தரவிட்டார். இதற்கு எதிராக வரலாறு காணாத போராட்டத்தை நடத்தியதன் பின்னணியில் பாஜகவும் அதன் சார்பு அமைப்புகளும் இருந்தன. பின்னர் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப் போகிறோம் என்று அத்வானி ரதயாத்திரை நடத்தி வி.பி.சிங் அரசையே கவிழ்த்தனர்.
வாஜ்பாய் ஆட்சியிலும்..
வாஜ்பாய் தலைமையில் பாஜக கூட்டணி அரசு அமைந்த போது இந்துத்துவா சார்பு வரலாற்றை பாடப்புத்தகங்களில் திணிக்க முயன்றது உட்பட பல சர்ச்சைகள் வெடித்தன.
தவறாது தொடரும் திணிப்பு
தற்போது தனிப்பெரும்பான்மையுடன் மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்த நாள் முதல் ஏதேனும் ஒரு 'திணிப்பு' வேலையை தவறாமல் செய்து வருகின்றனர்.
இத்தனை..இத்தனை..
பள்ளிகளில் சமஸ்கிருத வாரம், சமூக வலை தளங்களில் இந்தி கட்டாயம், பல்கலைக் கழகத்தில் இந்தி கட்டாயம், காஷ்மீரத்துக்கான 370வது பிரிவை நீக்குவோம் என மோடி சர்க்காரின் 'திணிப்பு பட்டியல்' நீண்டு கொண்டே செல்கிறது.
காந்தி ஜெயந்தி விடுமுறை ரத்து
இதன் உச்சமாக காந்தி பிறந்த நாளன்று அரசு விடுமுறை என்பதையும் இப்போது சூட்சமமாக ரத்து செய்து வைத்திருக்கிறது மோடி சர்க்கார். அதாவது நாட்டை தூய்மைப்படுத்துவதற்கான உறுதிமொழியை அன்று அனைவரும் ஏற்க வேண்டும் என்பதற்காகவே விடுமுறை ரத்து செய்யப்படுவதாக மோடி சர்க்கார் சொல்கிறது.
காந்தியின் பெயரால்..
காலந்தோறும் காங்கிரஸையும் காந்தியையும் எதிர்த்த சக்திகளே இந்துத்துவா சக்திகள். மகாத்மா காந்தியை படுகொலை செய்த கும்பலும் இதே இந்துத்துவா கூட்டம்தான். இதனால்தான் இப்போது காந்தியின் பிறந்த நாள் விடுமுறையை மறைமுகமாக ரத்து செய்து 'காந்திக்கு பெருமை' சேர்ப்பதுபோல காட்டிக் கொள்கிறது மோடி சர்க்கார்.
புதிய சர்ச்சை
காந்தி பிறந்த நாள் விடுமுறை ரத்து செய்திருப்பதன் மூலம் புதியதொரு அரசியல் சர்ச்சையை வெடிக்க வைத்திருக்கிறது மோடி சர்க்கார்..