மூடுங்கள்.. ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்கள் நடத்தும் காஃபி ஷாப்பை மூட சொன்ன யோகி.. காரணம்?
உத்தர பிரதேசத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களை வைத்து நடத்தப்பட்டு வந்த காஃபி ஷாப்பை மூடும்படி அம்மாநில அரசு முடிவெடுத்து இருக்கிறது.
லக்னோ: உத்தர பிரதேசத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களை வைத்து நடத்தப்பட்டு வந்த காஃபி ஷாப்பை மூடும்படி அம்மாநில அரசு முடிவெடுத்து இருக்கிறது.
உத்தர பிரதேச மாநில யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறது. தொடர் என்கவுண்டர்கள், இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல், இரண்டு நாள் முன் ஆப்பிள் நிறுவன பணியாளர் சுட்டுக் கொல்லப்பட்டது என்று தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார் யோகி.
இந்த நிலையில் அங்கு ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்கள் சேர்ந்து தங்கள் வாழ்க்கையை நடத்துவதற்காக நடத்தி வந்த காஃபி ஷாப்பை மூட உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கு அவர் கூறிய காரணம்தான் அதிர்ச்சிக்கும் மேல் அதிர்ச்சி.
லக்னோவில் இயங்கி வந்தது
டெல்லியில் இயங்கி வருகிறது ''ஷிரோஸ் ஹேங்அவுட்'' காஃபி ஷாப். இந்த கடை டெல்லியில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்களை வைத்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிறுவன கிளை உத்தர பிரதேச மாநிலம் லக்னோவிலும் தொடங்கப்பட்டு உள்ளது.
|
ஆதரவு அளித்தனர்
கடந்த அகிலேஷ் யாதவ் ஆட்சியில் இந்த கடை அங்கு தொடங்கப்பட்டது. சான்வ் பவுண்டேஷன் என்ற நிறுவனம் இந்த கடைகளை இயக்கி வருகிறது. இதை பார்த்து சிலிர்த்து போன அப்போதைய முதல்வர் அகிலேஷ் யாதவ், உத்தர பிரதேசம் முழுக்க இப்படி கடைகளை திறக்க அனுமதி அளிக்க போகிறேன் என்று கூறினார். ஆனால் அதற்குள் அவர் ஆட்சி முடிந்துவிட்டது.
பெரிய எதிர்ப்பு
இந்த நிலையில் தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத், அந்த ''ஷிரோஸ் ஹேங்அவுட்'' கடையை இழுத்து மூடும்படி கூறியுள்ளார். அந்த கடையை விரைவில் இழுத்து மூட வேண்டும். வேறு எங்கும் இதற்கு கிளைகளும் திறக்க கூடாது என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
காரணம் என்ன
இதற்கு அம்மாநில அரசின் பெண்கள் நல்வாழ்வு துறை பதில் அளித்து இருக்கிறது. இந்த காஃபி ஷாப் மூலம் எல்லாம் பாதிக்கப்பட்ட பெண்கள் முன்னேற முடியாது. அவர்களின் மறுவாழ்வை உபி அரசு பார்த்துக் கொள்ளும், அவர்களுக்கு தேவையான தொழிற்பயிற்சிகளை நாங்கள் அளிப்போம். இப்படி காஃபி ஷாப் நடத்துவது அவசியமற்றது என்று மூட சொல்லி இருக்கிறது.
நேர கூட கொடுக்கவில்லை
இது அங்கு வேலை பார்க்கும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. அவர்களே சில வருடங்களாகத்தான் தங்கள் சொந்த காலில் நிற்க தொடங்கி இருக்கிறார்கள். இந்த நிலையில் நேரம் கூட கொடுக்காமல் கடையை மூட சொன்னால் எங்கே செல்வது, யார் வேலையை கொடுப்பது என்று புலம்புகிறார்கள்.