எப்படி இறந்தார் சுனந்தா என்றே தெரியவில்லை.. டெல்லி போலீஸ் தகவல்
டெல்லி: சுனந்தா மர்ம மரணத்தில் துப்பு ஏதும் கிடைக்கவில்லை என்று டெல்லி போலீஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான சசி தரூர் (58), ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சுனந்தா புஷ்கரை (52) கடந்த 2010ம் ஆண்டு, காதல் திருமணம் செய்தார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ம் தேதி தெற்கு டெல்லியில் உள்ள லீலா பேலஸ் 5 நட்சத்திர ஹோட்டலில் தங்கி இருந்தபோது மர்மமான முறையில் சுனந்தா புஷ்கர் இறந்து கிடந்தார். இது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
விஷம்
சுனந்தாவின் மரணம் இயற்கை மரணம் அல்ல என்றும், விஷத்தால் நிகழ்ந்தது என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவித்தது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய டெல்லி போலீஸார், சசி தரூர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர்.
அறிக்கை தாக்கல்
இதுதொடர்பான ஒரு வழக்கு, டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சிஸ்டானி மற்றும் சந்தர் சேகர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் சுனந்தா மரணம் குறித்து 3 தினங்களுக்குள் அறிக்கையை தாக்கல் செய்யுமாறு டெல்லி போலீஸாருக்கு உத்தரவிட்டனர்.
எஃப்ஐஆர் பதிவு...
இந்த வழக்கு குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சனிக்கிழமை தாக்கல் செய்த மனுவில், சுனந்தா புஷ்கரின் மரண விவகாரத்தில் எஃப்ஐஆர் பதிவிட்டும் எந்தவித பயனும் இல்லாததால் இந்த வழக்கை வேறு புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இந்த வழக்கில் சசிதரூர் பொய் கூறுகிறார். அவருக்கு எதிரான ஆதாரங்களை அழித்துவிட்டார் என்றார்.
நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிப்பு
அப்போது டெல்லி போலீஸ் சார்பில் வாதாடும் வழக்கறிஞர் ராகுல் மெர்ஹா, அவரிடம் தாக்கல் செய்த அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். அதில் சுனந்தாவின் மரணத்துக்கான காரணம் தெரியவில்லை என்றுள்ளது. இதனிடையே தன்னையும் இந்த வழக்கில் வாதியாக இணைக்க வேண்டும் என்று சுனந்தாவின் மகன் டெல்லி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.