சோலார் மோசடி தகவலை நான் வெளியிடக் கூடாது என சாண்டி என் தாய்க்கு போன் செய்துள்ளார்: சரிதா
திருவனந்தபுரம்: நான் சிறையில் இருந்தபோது கேரள முதல்வர் உம்மன் சாண்டி என் தாய்க்கு போன் செய்து மோசடி குறித்த தகவலை உங்கள் மகள் வெளியிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார் என சோலார் பேனல் மோசடி வழக்கின் முக்கிய குற்றவாளியான சரிதா நாயர் தெரிவித்துள்ளார்.
சோலார் பேனல் மோசடி வழக்கின் முக்கிய குற்றவாளியான கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபரான சரிதா நாயர் நீதிபதி சிவராஜன் கமிஷன் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அப்போது சோலார் பேனல் குறித்து கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு ரூ.1.90 கோடியும், மின்சாரத் துறை அமைச்சர் ஆரியதானுக்கு ரூ.40 லட்சமும் லஞ்சம் அளித்ததாக தெரிவித்தார்.
இந்த குற்றச்சாட்டை சாண்டி மற்றும் ஆரியதான் ஆகியோர் மறுத்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து சரிதா விசாரணை கமிஷன் முன்பு கூறியிருப்பதாவது,
சிறை
2013ம் ஆண்டு நான் அட்டக்குளங்கரா சிறையில் இருக்கையில் என்னைப் பார்க்க கேரள மாநில காங்கிரஸ் தலைவர் கே. பி. கணேஷ் குமார் வந்தார். அவர் எனது தாயையும் உடன் அழைத்து வந்திருந்தார்.
சாண்டி
முதல்வர் சாண்டி கேட்டுக் கொண்டதால் தான் கணேஷ் குமார் என்னை பார்க்க சிறைக்கு வந்ததாக அவரின் உதவியாளர் பிரதீப் குமார் என்னிடம் கூறினார்.
வழக்குகள்
முதல்வர், காங்கிரஸ் தலைவர்கள் பென்னி பெஹனன், தம்பனூர் ரவி ஆகியோர் உங்கள் தாயிடம் பேசியுள்ளனர். உங்கள் மீதான அனைத்து வழக்குகள், நிதி பிரச்சனை அனைத்தையும் அவர்கள் கவனித்துக் கொள்வதாக வாக்குறுதி அளித்துள்ளனர். வேண்டும் என்றால் உங்கள் தாயிடமே கேளுங்கள் என்றார் பிரதீப்.
அம்மா
என் தாயிடம் கேட்டதற்கு சாண்டி, பென்னி பெஹனன் மற்றும் தம்பனூர் ரவி ஆகியோர் என்னிடம் போனில் பேசி உதவி கேட்டனர் என்றார். மேலும் என்னிடம் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுப்பதாக அவர்கள் என் தாயிடம் தெரிவித்துள்ளனர்.
அரசியல் தலைவர்கள்
இந்த விஷயத்தில் அரசியல் தலைவர்களின் ஈடுபாடு உள்ளது என்பதை நிரூபிக்க என்னிடம் பல ஆவணங்களும், ஆதாரங்களும் உள்ளன. சோலார் பேனல் குறித்து நான் திருவனந்தபுரத்தில் உள்ள முதல்வரின் அதிகாரப்பூர்வ அலுவலகத்தில் வைத்து உம்மன் சாண்டியிடம் பேசினேன். மோசடி வழக்கில் சிக்கிய பிஜு ராதாகிருஷ்ணன் உம்மன் சாண்டியை சந்தித்த பிறகே நான் அவரை சந்தித்தேன் என்றார் சரிதா.