டிச.29-ல் ஜார்க்கண்ட் முதல்வராக பதவியேற்பு.. சோனியா, ராகுலுக்கு ஹேமந்த் சோரன் அழைப்பு
ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வராக வரும் 29ம் தேதி பதவி ஏற்க உள்ள ஜேஎம்எம் கட்சி தலைவர் ஹேமந்த் சோரன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சந்தித்து விழாவில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுக்க டெல்லி புறப்பட்டு சென்றார்.
ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் ஜேஎம்எம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி 47 இடங்களில் வென்றுள்ள நிலையில் 50 உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆட்சியமைக்க உள்ளது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்சா (ஜேஎம்எம்) கட்சி தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராக பதவி ஏற்க உள்ளார். வரும் 29ம் தேதி பதவி ஏற்பு வைபவம் ராஞ்சியில் நடைபெற உள்ளது.
இந்த பதவி ஏற்பு விழாவில் பங்கேற்குமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அழைப்பு விடுப்பதற்காக இன்று ஹேமந்த் சோரன், ராஞ்சியில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சோரன், இன்று நான் டெல்லி புறப்படுகிறேன். காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை என்னுடைய பதவி ஏற்பு விழாவில் பங்கேற்குமாறு அழைக்க போகிறேன். வரும் 29ம் தேதி பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது" என்றார்.
இதன் காரணமாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் பதவி ஏற்பு விழாவில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என மூவரும் பங்கேற்பார்களா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.