துணை ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு கொடுத்த ஈபிஎஸ்... நன்றி சொன்ன வெங்கய்யா
துணை ஜனாதிபதி தேர்தலில் வெங்கய்யா நாயுடுவிற்கு ஆதரவு அளிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். இதற்கு வெங்கய்யா நாயுடு நன்றி கூறியுள்ளார்.
டெல்லி: வெங்கய்யா நாயுடுவை சந்தித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு ஆதரவு அளிப்பதாக கூறினார். தமக்கு ஆதரவு அளித்த முதல்வர், அதிமுக எம்பிக்களுக்கு வெங்கய்யா நாயுடு நன்றி கூறினார்.
குடியரசுத் தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து, ராம்நாத் கோவிந்த், நாட்டின் 14வது குடியரசுத் தலைவராக இன்று பதவியேற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பதவியேற்பு விழா நிறைவடைந்த பின்னர், மரியாதை நிமித்தமாக குடியரசுத் தலைவரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அதன் பின்னர் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவையும் எடப்பாடி சந்தித்தார்.
நீட் தேர்வு உள்ளிட்ட தமிழகத்தின் மிக முக்கியப் பிரச்னைகள்குறித்து ஆளுநரிடம் முதல்வர் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை குடியரசுத் தலைவர் வேட்பாளர் வெங்கையா நாயுடுவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை, தமிழக அமைச்சர்கள், உடனிருந்தனர்.
வெங்கய்யா நாயுடு, முதல்வர் பழனிச்சாமி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் சந்தித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிச்சாமி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் சகோதரர் போல பழகிய வெங்கய்யா நாயுடுவிற்கு ஆதரவு தருவதில் மகிழ்ச்சி அடைவதாக கூறினார்.
துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வெங்கய்யா நாயுடு அமோக வெற்றி பெறுவார் என்றும் கூறினார் முதல்வர். இதனையடுத்து பேசிய வெங்கய்யா, துணை ஜனாதிபதி தேர்தலில் தமக்கு ஆதரவு அளித்த முதல்வர், இரு அவைகளை சேர்ந்த அதிமுக எம்.பிகளுக்கும் நன்றி தெரிவித்தார்.
தமிழகத்தின் பிரச்சனைகளை தீர்க்க தம்மால் முடிந்த அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் எனவும் அறிவித்தார். ஜெயலலிதாவின் ஆசியோடு வெங்கய்யா நாயுடு சிறப்பாக ஆட்சி செய்வதாக கூறினார்.
நேற்றைய தினம் ஓபிஎஸ் மற்றும் அவரது அணியைச் சேர்ந்த எம்பிக்கள் வெங்கய்யா நாயுடுவை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.