'ஹாயாக' காலைக்கடன் கழித்தால் அவ்வளவுதான்... மாஸ் காட்டும் மகாராஷ்டிரா!
மகாராஷ்டிராவில் மக்கள் பொது இடத்தில் மலம் கழிக்காமல் இருக்க விசிலடிக்கும் எந்திரங்களை அனைத்து இடங்களிலும் பொருத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
மும்பை: மகாராஷ்டிராவில் மக்கள் பொது இடத்தை அசுத்தப்படுத்தாமல் இருக்க விசிலடிக்கும் எந்திரங்களை அனைத்து இடங்களிலும் பொருத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
எங்காவது மக்கள் அசிங்கப்படுத்தினால் அதைக் கண்டுபிடித்து, அவர்களை அவமானப்படுத்தும் வகையில் இந்த எந்திரம் விசில் அடிக்கும் என்று அம்மாநில அரசு கூறியுள்ளது.
அதிக பொருட் செலவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இது அந்த மாநிலத்தில் பொதுக் கழிப்பிட உபயோகத்தை அதிகப்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
மோசமான நிலையில் மஹாராஷ்டிரா
இந்தியா முழுக்க பல ஆண்டுகாலமாக பொது இடங்களில் சிறுநீர், மலம் கழிப்பதை தடுக்க பல விதமான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இதற்காக பல இடங்களில் பொதுக்கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தென்னிந்திய மாநிலங்கள் பல இதில் வெற்றி பெற்று இருந்தாலும் இன்னும் வட இந்தியாவால் பொது இடத்தை அசிங்கப்படுத்துவதில் இருந்து வெளியேற முடியவில்லை. அதில் மஹாராஷ்டிரா மாநிலமும் முக்கியமான ஒன்றாகும். குறைவான பொதுக் கழிப்பிடங்களைக் கொண்டுள்ளதால் மிகவும் அசுத்தமான அந்நிலையில் அந்த மாநிலம் காணப்படுகிறது.
மஹாராஷ்டிராவில் புதிய கழிப்பிடங்கள்
இந்த நிலையில் மஹாராஷ்டிராவில் பொது இடத்தை அசுத்தப் படுத்துவதை குறைக்கும் நோக்கில் நிறைய பொதுக் கழிப்பிடங்கள் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது குறித்து தகவல் வெளியிட்ட அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் " மஹாராஷ்டிராவில் சுத்தத்தை அதிகப்படுத்தும் நோக்கில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 40 லட்சம் பொதுக் கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வருடத்தில் இதைவிட அதிக அளவில் கழிப்பிடங்கள் கட்டப்படும்' என அவர் தெரிவித்தார்.
விசிலடித்து அவமானப்படுத்தும் எந்திரம்
ஆனால் மஹாராஷ்டிராவில் ஏற்கனவே கட்டப்பட்டிருக்கும் 40 லட்சம் கழிப்பிடங்களில் பல யாராலும் பயன்படுத்தப்படாமல் இருக்கின்றது. இன்னும் பலர் பொது இடத்தை மட்டுமே அசுத்தப்படுத்திக்கொண்டு இருக்கின்றனர். இவர்களை தண்டிக்கும் வகையில் விசில் அடிக்கும் எந்திரங்களை மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் பொருத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. "ஓடிசி'' என்று அழைக்கப்படும் இந்த எந்திரம் பொது இடங்களில் மக்கள் அசுத்தம் செய்யும் போது அதை சென்சார் மூலம் கண்டுபிடித்து அவர்கள் அந்த இடத்தை விட்டு அகலும் வரையில் சத்தமாக விசில் அடிக்கும்.
100 சதவிகிதம் தூய்மையான மாநிலம்
மக்கள் அசுத்தப்படுத்த வாய்ப்பிருக்கும் இடங்களில் எல்லாம் இந்தக் கருவியை பொருத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு மிகவும் அதிக அளவில் செலவு ஆகும் என தெரிவித்துள்ளது. இன்னும் 6 மாதங்களுக்கு இந்தக் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும். அதற்குள் மக்கள் அனைவரும் பொதுக் கழிப்பிடத்தை பயனபடுத்த தொடங்கி இருப்பார்கள் என்று அம்மாநில முதல்வர் கூறுகிறார். மேலும் இன்னும் 6 மாதத்தில் 100 சதவிகிதம் தூய்மையான மாநிலமாக மஹாராஷ்டிரா மாறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.