சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரமணா மீது ஆந்திர முதல்வர் ஜெகன் பரபரப்பு புகார்.. தலைமை நீதிபதிக்கு கடிதம்
விஜயவாடா: ஆந்திர அரசுக்கும் அம்மாநில உயர்நீதிமன்றத்துக்கும் இடையிலான பனிப்போர் மோதல்களாக இப்போது அதிகாரப்பூர்வமாகவே வெடித்துள்ளது. ஆந்திர மாநில உயர்நீதிமன்ற நீதிபதிகளை உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா கட்டுப்படுத்துவதாக முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி குற்றம்சாட்டி உள்ளார்.
ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜகன் மோகன் ரெட்டி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டேவுக்கு உயர்நீதிமன்றத்தில் அண்மையில் நடந்த சம்பவங்கள் குறித்து விளக்கமளித்து கடிதம் எழுதியுள்ளார்.
உச்சநீதிமன்ற நீதிபதி மற்றும் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகளுக்கு எதிராக ஒரு மாநில முதல்வர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியது இதுவே முதல் முறையாகும்,
ஜாதியைக் காட்டி ஊராட்சி தலைவரை தரையில் அமர வைப்பதா? கண்டிக்கத் தக்க கொடூர செயல்.. சதீஷ் கொதிப்பு
ஜெகன் மோகன் கடிதம்
ஜெகன் எழுதிய கடிதத்தில் சந்திரபாபு நாயுடு ஆட்சி காலத்தில் அமராவதியை தலைநகரமாக்க முயன்ற போது நடைபெற்ற நில அபகரிப்பு ஊழலில், நீதிபதி ரமணாவின் 2 மகள்களுக்கும் தொடர்பு உள்ளது என்றும், இது குறித்து தனது அரசு நடவடிக்கை எடுத்ததால் ஆந்திர உயர்நீதிமன்றங்கள் மூலம் ரமணா அதனை தடுக்க பார்க்கிறார் என தெரிவித்துள்ளார். மேலும், இதன் காரணமாகவே நில அபகரிப்பு ஊழல் வழக்கு குறித்து ஊடகங்கள் செய்திகளை வெளியிடக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் ஆராய்ந்து, மாநில நீதித்துறையின் நடுநிலைமை பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை தலைமை நீதிபதி அவர்கள் தொடங்க வேண்டும் என்றும் ஜெசுன் மோகன்ரெட்டி தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்
நீதித்துறை செயல்பாடுகள்
இது தொடர்பாக நேற்று மாலை பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆலோசகர் அஜயா கல்லம், " நீதிபதி ரமணா நாயுடுவுக்கு ஆதரவாக உள்ளார். தெலுங்குதேசம் கட்சிக்கு ஆதரவாக நீதித்துறை செயல்பாடுகளில் தலையிடுகிறார். அவர் ஹைதராபாத்தில் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றியுள்ளார்,
ஏன் கடிதம் எழுதினார்
உயர்நீதிமன்றத்தின் ஒரு சில நீதிபதிகளின் செயல்களைப் பற்றி உச்ச நீதிமன்றத்துக்கு உணர்த்த வேண்டும் என்ற அரசாங்கத்தின் முயற்சியே தலைமை நீதிபதிக்கு முதல்வர் எழுதிய கடிதம் ஆகும். முதல்வரின் கடிதமே அவருக்கும் அவரது அரசாங்கத்திற்கும் நீதித்துறை மீது இருக்கும் மகத்தான மரியாதையை குறிக்கிறது.
4000 ஏக்கர் நிலம்
அந்த கடிதத்தில சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகளின் "தவறான செயல்கள்" குறித்து பல்வேறு புகார்கள் வந்திருந்தது. எனவே இதுபற்றி எங்கள் அரசு, கடந்த முறை ஆட்சியில் இருந்த தெலுங்கு தேசம் அரசின் செயல்களை ஆராய அரசியலமைப்பு உரிமைகளுக்கு உட்பட்டு குழு அமைத்தது. அந்த விசாரணை குழு சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது சகாக்கள் சட்டவிரோத பரிவர்த்தனைகள் மூலம் அமராவதியில் சுமார் 4,000 ஏக்கர் நிலம் வாங்கி உள்ளதையும். அத்துடன் சட்டவிரோத வழிமுறைகள் பெரும் செல்வத்தை குவித்துள்ளதைக் கண்டறிந்துள்ளது. இந்த அறிக்கைக்கு சட்டமன்றம் ஒப்புதல் அளித்ததுடன், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமாறு ஆந்திர அரசு மத்திய அரசை வலியுறுத்தியது.
‘உயர்நீதிமன்றம் தடை
ஏனெனில் தெலுங்கு தேசம் கட்சி மீது அரசியல் ரீதியாக பழிவாங்கும் நடவடிக்கை என்ற குற்றச்சாட்டை தவிர்க்கவே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டப்பட்டது. ஆனால் நாயுடுவின் பரிவர்த்தனைகள் விவகாரத்தில் நீதிபதி ரமணாவின் தலையிட்டிருக்கிறார். இதில் அவருககு உள்ள பங்கை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடிதத்தில் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார். இந்த சட்ட விரோத பரிவர்த்தனைகள்,சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்றதற்கும், அமராவதியில் தலைநகர் இருப்பிடம் பற்றிய பொது அறிவிப்புக்கும் நடுவில் நடந்தவை ஆகும். ஆனால் இதுபற்றி விரிவான அறிக்கையை விசாரணை குழு கொடுத்த பின்னரும், ஆந்திர உயர்நீதிமன்றம், அரசு அமைத்த குழு அறிக்கைக்கு இடைக்கால உத்தரவு மூலம் தடை போட்டுள்ளது. இதை தனது கடிதத்தில் ஜெகன் விளக்கி உள்ளார். அமைச்சரவை துணைக் குழு அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு நடவடிக்கைக்கு பரிந்துரைத்த பின்னரும் தடை போடப்பட்டுள்ளதையும் கடிதத்தில் முதல்வர் விளக்கி உள்ளார்.
விசாரணை நிறுத்தி வைப்பு
அத்துடன் அமராவதி ஊழலில் முன்னாள் வழக்கறிஞர் ஜெனரல் தம்மலபதி சீனிவாஸ் உள்பட 12 பேருக்கு எதிராக ஊழல் தடுப்பு பணியகம் தாக்கல் செய்த எஃப்.ஐ.ஆரை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மகேஸ்வரி எப்படி அதன் விசாரணையை நிறுத்தி வைத்தார் என்பதையும் ஜெகன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். இந்த விவாகரத்திலும் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரமணா மற்றும் சந்திரபாபு நாயுடுவுக்கு இடையே உள்ள தொடர்பையும் கடிதத்தில் விவரித்துள்ளார்
நீதிபதிகளின் செயல்பாடுகள்
ஆந்திர உயர்நீதிமன்றத்தில் நடப்பவை குறித்து விரிவாகக் கூறியுள்ள முதல்வர் ஜெகன், ஒரு சில நீதிபதிகளின் பட்டியல் குறிப்பிட்டு, இந்த உயர்நீதிமன்றத்தின் அமர்வுகள் தெலுங்கு தேசம் கட்சி தொடர்பான முக்கியமான விஷயங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றன என்று கூறியிருக்கிறார். இதற்கான பல்வேறு நிகழ்வுகளை மேற்கோள் காட்டி விரிவான தகவல்களை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்" இவ்வறு முதல்வரின் ஆலோசகர் அஜயா கல்லம் கூறினார்.