ஹரியானா பாஜக அரசின் அடுத்த கெடுபிடி.. குடியிருப்பு பகுதிகளில் புதிதாக இறைச்சி கடைக்கு அனுமதியில்லை
சண்டிகர்: ஹரியானாவில் குடியிருப்பு பகுதிகளில் புதிதாக இறைச்சிக் கடை திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஹரியானாவில், முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாஜக அரசு எடுத்துள்ள இந்த முடிவு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மே மாதம், கட்டார் பிறப்பித்த ஒரு உத்தரவும் இதேபோல சர்ச்சைக்கு காரணமானது. லைசென்ஸ் இல்லாத மாமிச கடைகள், கசாப்பு கடைகளை மூட அவர் உத்தரவிட்டதன் காரணமாக 666 கடைகள் மூடப்பட்டன.
இந்த நிலையில், குடியிருப்பு பகுதிகளில் இனிமேல் இறைச்சிக்கடை அமைக்க அனுமதிக்க போவதில்லை என ஹரியானா அரசு தற்போது அறிவித்துள்ளது. இறைச்சி தொழிலை நம்பியுள்ளவர்களில் பெரும்பாலானோர், முஸ்லிம்கள் என்பதால், இந்த உத்தரவு சர்ச்சையை அதிகப்படுத்தியுள்ளது.
புதிதாக மாமிச கடைகளுக்கு லைசென்ஸ் தேவை என்றால், உள்ளாட்சி அமைப்புகளின் 21 வகையான நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வேண்டும்.