சறுக்கிய ஸ்கூட்டர்.. தாமதிக்காத பாதுகாவலர்கள்.. தப்பித்த மம்தா பானர்ஜி
கொல்கத்தா: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஓட்டிச் சென்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சறுக்கியதால் அவர் சற்றே நிலைத் தடுமாறினார்.
மேற்கு வங்கத்தில் ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் எப்படியாவது முதன் முதலாக ஆட்சியைக் கைப்பற்றிவிட வேண்டும் என்று பாஜக மிகத் தீவீரமாக செயல்பட்டு வருகிறது. அதேசமயம், 3-வது முறையாக ஆட்சியைக் பிடிக்க திரிணாமூல் காங்கிரஸ் போராடி வருகிறது.
இந்தநிலையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது மம்தா பானர்ஜி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் அவர் ஸ்கூட்டரிலேயே தலைமைச் செயலகத்திற்கு சென்றார். அவரது பாதுகாப்பு அதிகாரிகளும், அரசு அதிகாரிகளும் உடன் சென்றனர்.
அப்போது முதல்வர் மம்தா பானர்ஜி, ஸ்கூட்டரை ஓட்ட முடியாமல் திணறினார். ஒருக்கட்டத்தில் ஸ்கூட்டர் சரிய, அவர் விழச் சென்றுவிட்டார். சற்றும் தாமதிக்காத பாதுகாப்பு அதிகாரிகள் ஓடி வந்து ஸ்கூட்டரை தாங்கிப் பிடித்து, மம்தா விழாமல் பார்த்துக் கொண்டனர். இதன் பிறகு அவர் ஸ்கூட்டர் கீழே விழுந்து விடாதபடி அதிகாரிகள் தாங்கி பிடித்துக் கொண்டே உடன் சென்றனர்.