கங்குலிக்கு இப்படி ஒரு நிலையா.. கற்பனை கூட செய்யவில்லை.. மருத்துவமனையில் மமதா பானர்ஜி உருக்கம்
கொல்கத்தா: சவுரவ் கங்குலி, சரியாக உடல் நிலையை பராமரிக்கவில்லை என்பது ஆச்சரியமாக இருப்பதாகவும், அவருக்கு இப்படி நடக்கும் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை என்றும் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
பிரின்ஸ் ஆப் கொல்கத்தா, அதாவது கொல்கத்தாவின் இளவரசன் என்று புகழப்படுபவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி. கொல்கத்தாவை சேர்ந்த கங்குலி, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக பதவி ஏற்ற பிறகுதான், துவண்டு கிடந்த அணிக்கு புத்துணர்ச்சி கிடைத்தது.
2003 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது, ஆஸ்திரேலியா தவிர்த்து வேறு எந்த ஒரு அணியிடமும் தோல்வி அடையாமல், இறுதிப்போட்டி வரை இந்திய அணியை அழைத்துச் சென்றவர் கங்குலி.
சிறப்பான கேப்டன் கங்குலி
வெளிநாட்டு தொடர்களிலும் கங்குலி தலைமையின்கீழ்தான் இந்திய அணி சிறப்பாக செயல்பட தொடங்கியது. தோனி, யுவராஜ் சிங், ஜாகீர் கான் போன்ற இந்திய அணியின் ஜாம்பவான்கள் இவரால் பட்டை தீட்டி வளர்க்கப் பட்டவர்கள். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுக்க கங்குலியின் பேட்டிங் திறமை மற்றும் அவரது ஆக்ரோஷமான கேப்டன்ஷிப்புக்கு ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது.
கங்குலிக்கு நெஞ்சுவலி
தற்போது அவருக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராகவும், பொறுப்பு வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார். இந்த நிலையில்தான், இன்று காலை உடற்பயிற்சி செய்தபோது, திடீரென கங்குலிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இதயத்தின் மூன்று இடங்களில் வால்வு அடைப்பு இருப்பதை பார்த்து ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொண்டனர்.
நேரில் சென்ற மமதா
இதன் பிறகு சௌரவ் கங்குலி அங்கு ஓய்வு எடுத்து வருகிறார். மோசமான வகையில் இந்த அடைப்புகள் இருந்ததாகவும், நல்லவேளையாக சரியான நேரத்தில் பார்த்தது குணப்படுத்திவிட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, மருத்துவமனைக்கு நேரில் சென்று சௌரவ் கங்குலி உடல்நிலை பற்றி கேட்டறிந்தார்.
மமதா பானர்ஜி பேட்டி
கங்குலியை சந்தித்து நலம் விசாரித்த பிறகு நிருபர்களிடம் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, சவுரவ் கங்குலி தற்போது நல்ல ஆரோக்கியமாக இருக்கிறார். நான் நலமாக இருக்கிறேனா, என்று அவர் என்னிடம் கேட்டு அறிந்தார். தனது உடல்நிலை பற்றி முன்னதாகவே சௌரவ் கங்குலி பரிசோதித்து கொள்ளவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. கங்குலி ஒரு விளையாட்டு வீரர். அவருக்கு இப்படி ஒரு உடல்நலப் பிரச்சினை ஏற்படும் என்று கற்பனை கூட செய்து பார்க்கவில்லை. டாக்டர்கள் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்துள்ளனர். மருத்துவர்களுக்கு, நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கங்குலி உடல்நிலை
மம்தா மட்டும் கிடையாது, ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும், இது ஆச்சரியமான தகவல்தான். பந்துவீச்சாளர், பேட்ஸ்மேன், சிறந்த ஃபீல்டர் என தொடர்ந்து உடல் உழைப்பை செலுத்தி வந்தவர் சவுரவ் கங்குலி. அவருக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டது என்பது பலருக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இதேபோன்று சிகிச்சை கொடுக்கப்பட்ட பிறகு வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.