அதல்லாம் முதல்வர் தான் முடிவு செய்வார்... தம்பிதுரை!
குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து முதல்வர் தான் முடிவு செய்வார் என அதிமுக எம்பி தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து முதல்வர் தான் முடிவு செய்வார் என அதிமுக எம்பி தம்பிதுரை தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து தலைவர்களிடம் கலந்தாலோசித்து முடிவை அறிவிப்போம் என்றும் அவர் கூறினார்.
டெல்லியில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பணிகள் சூடுபிடித்துள்ளன. குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வுக்குழு மற்றக் கட்சிகளின் ஆதரவை திரட்டும் பணியில் இறங்கியுள்ளன.
தேர்வுக்குழு உறுப்பினர்களில் ஒருவரும் மத்திய அமைச்சருமான வெங்கய்யா நாயுடு அதிமுக எம்பி தம்பிதுரையை இன்று வரவழைத்து சந்தித்தார். அப்போது அவர் குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுகவின் ஆதரவை கோரியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் மக்களவை துணை சபாநாயகரான தம்பிதுரை இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடுவை நட்பு ரீதியாக மட்டுமே சந்தித்தாக தெரிவித்தார்.
மேலும் குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுக ஆதரவு அளிக்க வேண்டும் என வெங்கய்யா நாயுடு கேட்டதாகவும் அவர் கூறினார். குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்று முதல்வர் அதிமுக நிர்வாகிகள் முடிவெடுப்பார்கள் என்றும் அவர் கூறினார்.