நவம்பர் 8-ல் காவிரி மேற்பார்வை குழுவின் 4வது கூட்டம்
டெல்லி: காவிரி மேற்பார்வைக் குழுக் கூட்டம் மத்திய நீர்வளத் துறைச் செயலர் அலோக் ராவத் தலைமையில் அடுத்த மாதம் 8-ந் தேதி கூடுகிறது.
இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலர் ஷீலா பாலகிருஷ்ணன், கர்நாடக அரசின் தலைமைச் செயலர் எஸ்.வி. ரங்கநாத், கேரள நீர் வளத் துறைத் தலைமைப் பொறியாளர் லத்திகா மற்றும் புதுவை அரசு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.
காவிரி நீர் பங்கீடு தொடர்பாக மூன்று முறை நடத்தப்பட்ட இக் குழுக் கூட்டங்களில் உரிய தீர்வு காணப்படவில்லை. ஜூலை மாதம் 15-ந் தேதி நடைபெற்ற இக் குழுவின் 3வது கூட்டத்தின்போது தமிழகத்திற்கு உரிய தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும் என்றும் அதற்கு மேற்பார்வைக் குழு உத்தரவிட வேண்டும் என்றும் தமிழக அரசின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
ஆனால் தண்ணீர் திறந்துவிடுவதில் தாமதம் ஏற்பட்டதால் இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் தமிழகத்தின் சார்பில் முறையிடப்பட்டது. மழை காலத்தை காரணமாகக் கூறி மனு மீதான விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இந்நிலையில், தற்போது 4வது கூட்டம் வரும் நவம்பர் 8-ந் தேதி நடைபெற உள்ளது. இதனிடையே, டெல்லிக்கு நாளை கர்நாடக அரசு தலைமைச் செயலர் எஸ்.வி. ரங்கநாத் வர உள்ளதாகவும், தமிழகத்தில் பருவமழை தொடங்கி நன்றாக மழை பெய்து வருவதால் தற்போதைக்கு இக் கூட்டத்தை நடத்த அவசியத் தேவையில்லை என்று காவிரி மேற்பார்வைக் குழுத் தலைவர் அலோக் ராவத்திடம் அவர் வலியுறுத்த உள்ளதாகவும் கர்நாடக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.