வேகமாக பரவும் பன்றி காய்ச்சலால் 12பேர் பலி.. மீரட்டில் 87 பேருக்கு பன்றி காயச்சல்.. மக்கள் அச்சம்
மீரட்: ஒரு பக்கம் கொரோனா என்றால்.. மறுபக்கம் பன்றி காய்ச்சல் என வட மாநில மக்கள் அச்சத்தில் உள்ளார்கள். உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள மருத்துவமனையில் நடத்தப்பட்ட சோதனையில் 87 பேருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது.
Recommended Video
அங்கு பன்றி காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.
வடமாநிலங்களில் கொரோனா வைரஸ் பீதி அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் டெல்லியைச் சேர்ந்த ஒருவர் இத்தாலியில் இருந்து வந்து ஆக்ராவில் உள்ள பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார். அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது. இதனால் ஆக்ராவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதேபோல் ராஜஸ்தான் மாநிலத்தில் இத்தாலி சுற்றுலாப் பயணி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் அங்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ்.. அறிகுறிகள் என்ன? தற்காப்பு நடவடிக்கைகள் என்ன?.. தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!
கொரோனா ஒருபக்கம் என்றால் பன்றிகாய்ச்சல் பாதிப்பும் வடமாநிலங்களில் அதிகமாக உள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் வேகமாக பரவி வரும் பன்றி காய்ச்சலுக்கு இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. உத்திரபிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பன்றி காய்ச்சல் பரவி வருகிறது.
காய்ச்சல் காரணமாக ஏராளமான மக்கள் உயிரிழந்து வருவதால் அம்மாநிலத்தில் உள்ள மக்கள் அச்சத்தில் உள்ளார்கள். பன்றிக் காய்ச்சல் எப்படி பரவும், அதற்கு எந்த விதமான சிகிச்சை பெற வேண்டும், உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து போதிய விழிப்புணர்வுஇல்லாமல் பீதியில் உள்ளார்கள்.
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ளஅரசு மருத்துவமனையில் 20 ராணுவ வீரர்கள் உள்ப 87 பேருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
அதில் 11 வீரர்கள் உடல் நலம் தேறியதால் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மற்ற வீரர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.அவர்கள் ஐந்து நாட்களுக்கு பிறகு மருத்துவமனையில்இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள். தற்போது வரை 387 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
அம்மாநில சுகாதார துறை அதிகாரிகள் இதுபற்றி கூறுகையில், நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். நிலைமைகளை சமாளிக்க மருத்துவமனைகளுக்கு போதுமான அளவு மருந்துகள் மற்றும் பிற உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. பன்றி காய்ச்சலை சமாளிக்கவும் விழிப்புணர்வை உருவாக்கவும் அம்மாநில அரசு மூவர் கொண்ட குழுவை நியமித்துள்ளது.