பீகார் தேர்தல்: துல்லியமான எக்ஸிட்போலை போட மறுத்து ரிசல்ட்டை சரியாக ஒளிபரப்பிய சி.என்.என்.-ஐ.பி.என்
டெல்லி: பீகார் சட்டசபை தேர்தல் தொடர்பான மிக துல்லியமான கருத்துக் கணிப்பை "நம்ப முடியாமல்" கடைசிநேரத்தில் ஒளிபரப்பாமல் விட்டது சி.என்.என்.-ஐ.பி.என் சேனல். ஆனால் தேர்தல் முடிவுகளின் போது அனைத்து டி.வி. சேனல்களும் தவறான தகவல்களை தந்த போது சி.என்.என்.-ஐ.பி.என் மட்டுமே சரியான தகவலை ஒளிபரப்பி பெருமை தேடிக் கொண்டது.
பீகார் சட்டசபை தேர்தலில் 5வது கட்ட வாக்குப் பதிவு முடிந்த உடனே தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை கொட்டிக் குவித்தன டி.வி.சேனல்கள். இதில் சாணக்யாவின் கருத்து கணிப்பை ஒளிபரப்பிய நியூஸ் 24 உள்ளிட்டவை பா.ஜ.க.வுக்கு சாதகமாக தெரிவித்திருந்தன. சில சேனல்கள் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணிக்கும் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணிக்கும் கடும் போட்டி இருக்கும் என்றும் தெரிவித்தன.
The survey that @ibnlive developed cold feet about and dropped https://t.co/JW6da0vI6g pic.twitter.com/jbE8cggLn0
— Shivam Vij (@DilliDurAst) November 6, 2015
ஆக்ஸிஸ்- மை இண்டியா நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில், ஐக்கிய ஜனதா தளம் கூட்டணிக்கு 169 முதல் 183 இடங்களும் பாரதிய ஜனதா கூட்டணிக்கு 58 முதல் 70 இடங்களும் கிடைக்கும் என்று கணித்தது. இந்த கணிப்பு மிகச் சரியானது என்பதை நேற்றைய தேர்தல் முடிவுகள் நிரூபித்தும் விட்டன.
ஆனால் ஆக்ஸிஸ்- மை இண்டியா நிறுவனத்தின் இக் கருத்து கணிப்பை கடைசிநிமிடத்தில் திடீரென சி.என்.என்.ஐ.பி.என். ஒளிபரப்பாமல் நிறுத்திவிட்டது. இதற்கு காரணமாக சொல்லப்பட்டது, 41 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சிக்கு எப்படி 26 முதல் 30 இடங்கள் கிடைக்கும் என்று கூற முடியும் என்று கருத்து கணிப்பு நடத்திய நிறுவனத்திடம் சி.என்.என்.-ஐ.பி.என் சேனல் விளக்கம் கேட்டிருக்கிறது.
அத்துடன் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணிக்கு வெறும் 58 முதல் 70 இடங்கள்தான் கிடைக்கும் என்பது அபத்தமாக இருக்கிறதே என்ற வாதத்தையும் சி.என்.என்.ஐ.பி.என் சேனல் தரப்பு முன்வைத்ததாம். இதற்கு உரிய விளக்கம் கொடுக்கப்பட்ட போதும் சி.என்.என்.ஐ.பி.என் சேனலால் அந்த கருத்து கணிப்பை ஜீரணிக்க முடியாமல் ஒளிபரப்பாமலே விட்டது.
இதனைத் தொடர்ந்து கருத்து கணிப்பு நடத்திய ஆக்ஸிஸ்- மை இண்டியா தனது வெப்சைட்டில் இக்கருத்து கணிப்பை வெளியிட்டு அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிட்டது. இதை ஆஜ்தக் சேனல் ஒளிபரப்பியது.
அதே நேரத்தில் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான போது என்.டி.டி.வி. உள்ளிட்ட பெரும்பாலான டி.வி. சேனல்கள் பாரதிய ஜனதா கட்சி கூட்டணியே முன்னிலை வகித்து வருவதாக ஒரு சேர கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தன.
சி.என்.என்.- ஐ.பி.என். மட்டும் சளைக்காமல் 'உண்மை' நிலவரத்தை அதாவது ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியே முன்னிலை வகித்து வருவதாக ஒளிபரப்பியது. கடைசியில் தேர்தல் முடிவுகளும் அப்படியே வந்தன..
ஒரு மணிநேரம் கழித்து பிற டி.வி. சேனல்களும் 'உண்மையை' ஒளிபரப்ப நேரிட்டது. இது தொடர்பாக சி.என்.என். - ஐ.பி.என் நிறுவனம் கூறுகையில், பிற சேனல்கள் ஏஜென்சிகளின் தகவல்களை நம்பி வெளியிட்டதாகவும் தாங்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் இருந்து ஈ டிவி சேனல் செய்தியாளர்களின் உதவியுடன் தேர்தல் முடிவுகளை பெற்று வெளியிட்டதாக கூறியிருந்தது.
சி.என்.என்.- ஐ.பி.என். நிறுவனம், ஈ. டிவி இரண்டுமே பிரதமர் மோடிக்கு மிக நெருக்கமான ரிலையன்ஸ் குழுமத்துக்கு சொந்தமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.