சி.என்.என் - ஐ.பி.என். ஒப்பந்தம் முடிவுக்கு வருகிறது- கோதாவில் குதிக்கிறது ஜீ டிவி?
டெல்லி: அமெரிக்காவின் சி.என்.என். சேனலுடன் இந்தியாவின் ஐ.பி.என் சேனல் செய்து கொண்ட 10 ஆண்டுகால ஒப்பந்தம் முடிவடைய உள்ளது. இதனைத் தொடர்ந்து சி.என்.என் மற்றும் ஜீ டிவி இணைந்து புதிய ஆங்கில சேனலை தொடங்கலாம் எனவும் கூறப்படுகிறது.
சி.என்.என். சேனலை நடத்துகிற Turner International மற்றும் டிவி18 குழுமத்தின் Global Broadcast News (GBN) ஆகியவைதான் முதலில் ஒப்பந்தம் போட்டன. அதன் பின்னர் GBN என்பது IBN18 Broadcast Ltd ஆகி பின்னர் TV18 Broadcast Ltd ஆனது. இந்த TV18 Broadcast Ltd நிறுவனம்தான் தற்போது சி.என்.என்.- ஐ.பி.என், ஐபிஎன்7 என்கிற இந்தி செய்தி சேனல், ஐபிஎன் லோக்மாத் என்கிற மராத்தி செய்தி சேனல்களை நடத்துகிறது.
இந்நிறுவனம் தற்போது ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி வசம் இருக்கிறது. முகேஷ் அம்பானி வசமான பின்னர் நெட்வொர்க் 18 குழுமத்தின் நிறுவனரான ராகவ் பால் அதிலிருந்து ராஜினாமா செய்துவிடுகிறார். அதேபோல் இந்நிறுவனத்தின் தலைமை செய்தி ஆசிரியராக ராஜ்தீப் சர்தேசாயும் வெளியேறிவிடுகிறார்.
"சி.என்.என்.-ஐ.பி.என்." சேனல் 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த இரு நிறுவனங்களிடையேயான 10 ஆண்டுகால ஒப்பந்தம் வரும் 2016ஆம் ஆண்டு ஜனவரியுடன் முடிவடைகிறது.
அதன் பின்னர் இரு நிறுவனங்களும் ஒப்பந்தத்தை புதுப்பிப்பதில்லை என முடிவு செய்துள்ளன. இரு நிறுவனங்களும் சேர்ந்தே இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே சி.என்.என். நிர்வாகிகள் குழு அண்மையில் நொய்டாவில் உள்ள ஜீ நியூஸ் சேனல் அலுவலகத்துக்கு சென்று பார்வையிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜீ நியூஸ் சேனலும் சி.என்.என்.-ம் கை கோர்க்கப் போவதாக செய்திகள் பரவி உள்ளன.
இந்தியாவைப் பொறுத்தவரையில் ஊடகத் துறையில் அன்னிய முதலீடு என்பது 26% அனுமதிக்கப்பட்டுள்ளது. தற்போது இதனை 49% ஆக அதிகரிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. அப்படி முடிவு அறிவிக்கப்பட்டால் ஜீ மற்றும் சி.என்.என். இரு நிறுவனங்களும் சம பங்குதாரர்களாக இருந்து ஒரு சேனலை தொடங்கலாம் எனவும் கூறப்படுகிறது.