அரசியல்வாதிகளை முட்டாள்கள் என்று நான் சொல்லவே இல்லையே!- சி.என்.ஆர்.ராவ்
"நமது நாட்டில் அறிவியல் ஆராய்ச்சிகளுக்கான முதலீடு, அதற்கான நிதியுதவி ஆகியவை மிகவும் குறைவாக இருப்பது முட்டாள்தனமானது என்றுதான் நான் கூறினேன். இது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது' என்று அவர் குறிப்பிட்டார்.
பாரத ரத்னா விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சி.என்.ஆர்.ராவ், தன்னைச் சந்தித்த செய்தியாளர்களிடம் 'அறிவியல் ஆராய்ச்சிகளுக்குப் போதிய நிதி ஒதுக்காத அரசியல்வாதிகள் முட்டாள்கள்' என தெரிவித்ததாக செய்திகள் வெளியாயின.
அவரது கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்த நிலையில், பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தனது பேச்சு குறித்த விளக்கத்தை அளித்தார்.
அவர் கூறுகையில், "அறிவியல் ஆராய்ச்சிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை துரதிருஷ்டவசமாக அரசியல்வாதிகள் புரிந்து கொள்வதில்லை என்றுதான் நான் கூறியிருந்தேன்.
அறிவியலுக்கு அளிக்க வேண்டிய முக்கியத்துவம், அறிவியல் ஆராய்ச்சிக்கு போதிய நிதி ஒதுக்கீடு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அரசியல்வாதிகள் புரிந்து கொண்டால் இந்தியா ஒளிரும்.
அறிவியல் ஆராய்ச்சிகளுக்குத் தேவையான நிதி ஆதாரம் குறித்து அரசியல்வாதிகள் தெரிந்திருக்க வேண்டும்.
அது குறித்த புரிதல் அவர்களுக்கு இல்லையே என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தவே, 'முட்டாள்தனமான சூழ்நிலை' என்று கூறினேன்.
நான் யாரையும் முட்டாள் என்று குறிப்பிடவில்லை," என்றார்.