கூட்டுறவு வங்கிகடன் ரத்து.. அய்யாகண்ணுவை அலேக்காக தூக்கி மகிழ்ச்சி ஆரவாரம்
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் அனைத்தையும் ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 22 நாட்களாக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர். வழக்கு தொடர்ந்து வென்ற அய்யாகண்ணுவை அலேக்காக தூக்கி வைத்துக் கொண்டு விவசாயிகள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
சிறு குறு விவசாயிகள் மட்டுமல்லாமல் அனைத்து விவசாயிகள் வாங்கிய கடனையும் தள்ளுபடி செய்ய தேசிய தென்னிந்திய நதி நீர் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு சென்னை உயர்நிதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. முழுமையாக கூட்டுறவு வங்கிக் கடனை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது என்பது 22 நாட்களாக டெல்லியில் போராடி வந்த விவசாயிகளை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. இதுகுறித்து அய்யாகண்ணு கூறியதாவது:
சிறு குறு கடன் தள்ளுபடி
தமிழகத்தில் சிறு குறு விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய கடன்கள் மட்டும் தள்ளுபடி செய்து தமிழக அரசு ஆணையிட்டது. 16 லட்சம் பேர் சிறு குறு விவசாயிகள். 4 லட்சம் பேர் பெரிய விவசாயிகள். நான் 20 ஏக்கர் நிலமுள்ள பெரிய விவசாயி. ஆனாலும் எனக்கு பயிர் கடனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது தமிழக அரசு.
வழக்கு
இரண்டரை ஏக்கர் முதல் 5 ஏக்கர் வரைதான் சிறு விவசாயிகள். எனக்கு ஏன் கடன் தள்ளுபடி செய்தீர்கள். அப்படி என்றால் தமிழ் நாட்டில் உள்ள விவசாயிகள் அனைவருக்கும் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தேன்.
தீர்ப்பு
என் வழக்கில் நீதிபதி நாகமுத்து விசாரித்தார். 8 மாதங்கள் வழக்கு நடைபெற்ற நிலையில் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளார். தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்து நீதிபதி நாகமுத்து உத்தரவிட்டுள்ளார்.
உற்சாக அய்யாகண்ணு
தமிழ்நாட்டில் போராடாமல் டெல்லியில் வந்து விவசாயிகள் போராடுகிறார்கள் என்று பாஜகவினர் சொல்லி வருகிறார்கள். தமிழகத்தில் எங்களுக்கு முழு வெற்றி கிடைத்துவிட்டது. இனி எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டியது டெல்லியில்தான். தேசிய வங்கிகளில் பயிர்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் வரை நாங்கள் இங்கு தொடர்ந்து போராடுவோம் என்று அய்யாகண்ணு கூறியுள்ளார்.