நிலக்கரி ஊழல்: ஜிண்டால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சிபிஐ
நிலக்கரி ஊழல் வழக்கில் நவீன் ஜிண்டால் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
டெல்லி: நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்ததில் ரூ.1.80 கோடி முறைகேடு நடைபெற்ற வழக்கில், நவீன் ஜிண்டால் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் மத்திய அரசின் ஆட்சி நடந்தபோது, நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் ரூ. 1.80 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது என்று புகார்கள் எழுந்தன.
இதுதொடர்பாக சிபிஐ நடத்திய விசாரணையில், மத்திய பிரதேச மாநிலம் ருத்ராபுரி நிலக்கரி சுரங்கம், கே.எஸ்.எஸ்.பி.எல். நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்தது என்பதை சிபிஐ கண்டுபிடித்தது. இந்த வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த மதுகோடாவும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
இது தொடர்பாக டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில், ஹெச்.சி.குப்தா, க்ரோபா, சமாரியா உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி பரத் பரஸார், முன்னாள் செயலர் ஹெச்.சி.குப்தா, முன்னாள் இணைச் செயலர் கே.எஸ். க்ரோபா, முன்னாள் இயக்குனர் கே.சி. சமாரியா, கே.எஸ்.எஸ்.பி.எல். நிறுவனம் மற்றும் அந்நிறுவனத்தின் இயக்குனர் பவன்குமார் அலுவாலியா ஆகியோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பில் ஹெச்.சி.குப்தா உள்ளிட்ட 3 பேருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. தற்போது சிறைத் தண்டனை பெற்ற இவர்கள் அனைவரும் உடனடி ஜாமீன் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் சிபிஐ, நவீன் ஜிண்டாலுக்கு எதிராக மீண்டும் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதே சமயம் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டுள்ளது.