அரசியலில் இதெல்லாம் "ஜகஜம்"... கோர்ட் சம்மன் குறித்து மன்மோகன்சிங்
டெல்லி: நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகக் கோரி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருப்பது வேதனையாக இருந்தாலும் விசாரணைக்கு தயாராக இருக்கிறேன் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தனது 10 ஆண்டு பதவி காலத்தில் கூடுதலாக நிலக்கரி இலாகாவையும் கவனித்து வந்தார். இந்த நிலையில் 2005-ம் ஆண்டு ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் ஊழல் நடந்ததாக கூறப்படுவது குறித்து சி.பி.ஐ. நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது.
குமார் மங்கலம் பிர்லா மீதும், நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் பி.சி.பாரக் மற்றும் சில அதிகாரிகள் மீதும் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் வழக்கை முடித்து வைக்கும் அறிக்கையையும் சி.பி.ஐ. தாக்கல் செய்தது. மேலும், இந்த ஊழலில் மன்மோகன் சிங்குக்கு எந்த வகையிலும் தொடர்பு இல்லை என்று சி.பி.ஐ. தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
Of Course I am upset but this is a part of life :Former PM Manmohan Singh to reporters in Parliament #CoalScam
— ANI (@ANI_news) March 11, 2015
ஆனால் இதை நிராகரித்த நீதிமன்றம், இவ்வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் விசாரணை நடத்த கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து ஜனவரி மாதம் மன்மோகன்சிங்கிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்பட்டது.
இந்நிலையில் ஏப்ரல் 8-ந் தேதி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் மன்மோகன்சிங் நேரில் ஆஜராக இன்று சம்மன் அனுப்பப்பட்டது. இந்த சம்மன் குறித்து கருத்து தெரிவித்த மன்மோகன்சிங், பொதுவாழ்க்கையில் இத்தகைய விசாரணைகளும் ஒரு அங்கம்தான்.. இருப்பினும் வேதனையாக இருக்கிறது.
இந்த விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். என் தரப்பு உண்மைகளை வெளிப்படுத்த ஒரு சந்தர்ப்பமாக பார்க்கிறேன். நிச்சயம் உண்மைகள் ஒருநாள் வெளியாகும்.
இந்த சம்மன் குறித்து வழக்கறிஞர்களுடன் ஆலோசிப்பேன் என்று கூறியுள்ளார்.