1993ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் ரத்து: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு!
டெல்லி: 1993ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட அனைத்து நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளையும் ரத்து செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரையில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி இந்த முறைகேடுகள் காரணமாக அரசுக்கு ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக அறிக்கை தாக்கல் செய்தார்.
பின்னர் இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, நீதிபதிகள் மதன் பி லோகூர், குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கு விசாரணையை கண்காணித்து வந்தது.
இந்நிலையில் வாஜ்பாய் பிரதமராக இருந்த காலகட்டத்தில் இருந்து நடைபெற்ற நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் குறித்து விசாரிக்க முடிவு செய்தது. நிலக்கரிச் சுரங்க ஊழல் வழக்குகள் கடைசியாக விசாரணைக்கு வந்தபோது ,விசாரணை அதிகாரிகள் அளித்த தகவலிலும், சிபிஐ அளித்த தகவலிலும் முரண்பாடு இருந்ததால், தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர் இந்த வழக்குகளை ஆய்வு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தலாமா? அல்லது முடித்துக் கொள்ளலாமா? என்பது குறித்து பரிந்துரைக்குமாறு உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று இந்த வழக்கில் அதிரடியான தீர்ப்பை வழங்கி இருக்கிறது உச்சநீதிமன்றம், அதாவது 1993 ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்ட அனைத்து நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளும் சட்டவிரோதமானவை. அதனால் அவை அனைத்தையும் ரத்து செய்வதாக அதிரடியாக தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம்.
மேலும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளில் ஒரேவிதமான கொள்கைகள் பின்ப்பற்றப்படவில்லை.. எந்த ஒரு வெளிப்படைத்தன்மையும் கடைபிடிக்கவில்லை என்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் இதுவரை நிலக்கரியே எடுக்காத சுரங்கங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படுகின்றன. நிலக்கரி உற்பத்தி நடைபெறும் சுரங்கங்கள் தொடர்பான நிலை குறித்து செப்டம்பர் 1-ந் தேதி அறிவிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ள்ளனர்.